
திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை லஞ்சம் கொடுப்பது என விமர்சித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி எனும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார்.
இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இரு மதங்களுக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இந்து முன்னணி நிர்வாகி வி.ஜி.நாராயணன் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அவரின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.
