
டெல்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது.
அப்போது, டெல்லி செங்கோட்டையிலுள்ள கொடிக் கம்பத்தில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடியை பஞ்சாபி நடிகர் தீப் சித்து என்பவர்தான் ஏற்றினார்.
அதனை அவர் ஒப்புக்கொண்டார். அவர் குறித்து கூறிய விவசாயிகள் அமைப்பு, ‘அவர் ஒரு சீக்கியர் அல்ல.
அவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்று குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தீப் சித்து கைது செய்யப்பட்டார். சுமார் 70 நாள்கள் சிறை விசாரணைக்குப் பிறகு ஏப்ரல் 17-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில், குண்டிலில் – மனேஷ்வர் – பல்வால் விரைவுச் சாலையில் அவர் ஓட்டிவந்த கார் ட்ரக் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்
