
கேரளாவில் கடந்த 2020 ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திருவனந்தபுரத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
அதனையடுத்து, திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன் என்பவரை மேயராக அறிவித்தது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் மேயரானவர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றார்.
அது திருவனந்தபுரம் போன்ற மாநிலத் தலைநகருக்கு மேயரானது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
அவருடைய அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இந்த உயரத்தை அவர் எட்டியிருந்தார்.
தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில், கேரளா மாநிலம் பாலுச்சேரி தொகுதியில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக உள்ள சச்சின் தேவ் என்பவரை ஆர்யா திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கேரள சட்டப்பேரவையில் உள்ள மிக இளவயது எம்.எல்.ஏ சச்சின் தேவ் ஆவர்.

