
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள், காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளார். அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார்.
கமிஷனர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபுவின் மகள், “நான் ஜெயக்கல்யாணி அமைச்சர் சேகர்பாபுவின் மகள்.
இவர் சதீஷ் நாங்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வருகிறோம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு தான் திருமணம் செய்துகொண்டோம். 2021 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். மூன்று நாள்களுக்கு பிறகு எங்களை புனேவில் வைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து இங்கு அழைத்து வந்தனர்.
திருவள்ளூரில் 2 மாதம் அவரை சட்டத்துக்கு புறம்பாக போலீஸ் உதவியுடன் அடைத்து வைத்தனர்.
இவருடைய பெற்றோர் மற்றும் நண்பர்களை போலீஸார் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். இதற்கு எல்லாம் எங்களிடம் ஆதாரம் உள்ளது.
ஆகஸ்ட் 18-ம் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இருந்தோம். அப்போது எனது தந்தை இவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்தார்.
இவர் மீது தவறான புகார் அளித்து நிறைய வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.
நாங்கள் மூன்று நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். தற்போது இங்கு வந்து உதவிக்கோருகிறோம்.
என்னுடைய தந்தை அமைச்சராக இருப்பதால் தமிழக அரசோ அல்லது தமிழகத்தில் உள்ளவர்களோ இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். இதன்காரணமாக கர்நாடகா வந்துள்ளோம். இங்குள்ள அரசிடம் எங்களுக்கு உதவ கோரிக்கை வைக்கிறோம். எங்களுக்கு கொலை மிரட்டல் வருவதால் கர்நாடக போலீஸார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கடந்த முறை வீட்டை விட்டு வெளியேறிய போது சதீஷ் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய பார்த்தார்கள். அவர் மீது ஏதேனும் வழக்குப்பதிவு செய்தால் நான் தற்கொலை செய்துக்கொள்வேன் எனக் கூறியதால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இப்போது நாங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளோம். இனிமேல் இவருடைய குடும்பத்தில் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. ” எனக் கூறினார்.
