சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

மின் வெட்டு, பெட்ரோல் டீசல் இல்லை, விண்ணை முட்டும் விலைவாசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு அழிவின் விளிம்பில் இலங்கை!

 

இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரு நாட்களுக்கு டீசல் வாங்க யாரும் வர வேண்டாம் என சிலோன் பெட்ரோலிய நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

மருந்துகள் இல்லை.. நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் மின்வெட்டு என கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் .

எரிபொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால், மின் உற்பத்தி மையங்களில், மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மருத்துவமனைகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கும் சூழல் நிலவுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் 37, 500 மெட்ரிக் டன் எரிபொருளுடன் நிற்கும் கப்பலில் இருந்து, எரிபொருள் இன்னும் இறக்குமதி செய்யப்படாததால், பெட்ரோல் பங்க்குகளுக்கு டீசல் வாங்குவதற்கு புதன் மற்றும் வியாழக்கிழமை பொதுமக்கள் வர வேண்டாம் என கொழும்பு பெட்ரோலிய கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க நாள் முழுவதும் காத்திருந்து ஏமாற்றம் அடைவதாக மக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாக பெரும்பாலான மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தவறான பொருளாதார கொள்கைகளால் ஆட்சியாளர்கள் மக்களை கடும் நெருக்கடிக்கு தள்ளி விட்டதாகவும், இந்த நிலை மேலும் மோசமடையும் என்றும் கூறப்படுகிறது.

261 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன