
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டா அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.
டெல்லி தீன்தயாளர் உபாத்யாயா மார்க்கில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இடத்தில் தி.மு.கவுக்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்துக்கு அண்ணா – கலைஞர் அறிவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தைத் திறந்துவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றார்.
டெல்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து தமிழகத்தில் கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்தநிலையில், இன்று அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற்றது. அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்தவிழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி மஹுவா மொய்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
