
1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது தமிழக பா.ஜ.,
கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலும், களத்தில் முன்கூட்டியே இறங்கி வேலை செய்யாததாலும், ஆர்.கே.நகரில், பா.ஜ., தலைகுனியும் அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை கிடைத்ததில், 1,511 ஓட்டுகள், இந்த முறை எங்கே போயின என்பது தெரியாமல், அக்கட்சியினர், தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில், அரசியல் மேடைகளில், ‘கோட்டையில் தாமரை மலரும்’ என, பா.ஜ., தலைவர்கள் முழங்கி வருகின்றனர். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2016 தேர்தலில், அங்கு பா.ஜ., 2,928 ஓட்டுகளை பெற்றிருந்தது. ஆனால், இம்முறை, ‘நோட்டா’வை விட குறைவாக பெற்றுள்ளது. இது, தொண்டர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி உள்ளது.

இது குறித்து, தமிழக பா.ஜ.,வினர் கூறியதாவது: சென்னை, ஆர்.கே.நகரில், ‘டிபாசிட்’ கிடைப்பது கடினம் என, எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், கடந்த முறையை விட, அதிக ஓட்டுக்கள் பெற முடியும் என, நினைத்தோம். ஆனால், 1,511 ஓட்டுகள் குறைந்துள்ளன; அந்த ஓட்டுகள் எங்கே போயின? இடைப்பட்ட ஓராண்டு காலத்தில், கட்சி வளர்ந்திருக்க வேண்டும்; மாறாக, ஓட்டு வங்கி தேய்ந்துள்ளது.தொகுதியில் கணிசமாக உள்ள, வடமாநிலத்தவர்களும், பா.ஜ.,வை தவிர்த்துள்ளனர். இதற்கான காரணங்களை, ஆராய்வது அவசியம்.
கட்சி ரீதியாக, தோல்விக்கு கோஷ்டிப் பூசல் முக்கிய காரணம். மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், ஒரு முறை தான் பிரசாரத்திற்கு வந்தார். தமிழிசை மட்டும், தனி ஆளாக வலம் வந்தார்.இது, ஒரு புறம் இருக்க, தேர்தல் வரப்போகிறது என தெரிந்தும், களப் பணியை முன்கூட்டியே, பா.ஜ., தலைமை துவக்கவில்லை. ‘பூத்’ அளவில் கட்சியை வளர்க்க, கமிட்டிகள் போடப்பட்டிருப்பதாக கூறினாலும், யாரையும் அங்கு காண முடியவில்லை.
தேர்தல் வரும் என தெரிந்தும், மெத்தனமாக இருந்து விட்டனர். மத்திய திட்டங்களை, மக்களிடம் எடுத்துக் கூற தவறிவிட்டனர். மொத்தம் உள்ள, 258, ‘பூத்’களில், தலா, 10 ஓட்டுகள் கூட கிடைக்கவில்லை. அதனால், ‘கோட்டையை பிடிப்போம்’ என்ற பேச்சை, மூட்டை கட்டி வைப்பதே சரி. இவ்வாறு அவர்கள் கூறினர்.
383 Views
