
குஜராத் சட்டசபையின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
அதன்படி டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன.
குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் இங்கு பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியுமே பிரதான கட்சிகளாக களம் இறங்கியது.
இதில் பாரதிய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன.
இம்முறை குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசுடன் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது.
இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால் இம்முறையும் ஆட்சியை கைப்பற்றி விட பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது. குஜராத்தில் பாரதிய ஜனதா கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது.
6 முறை ஆட்சியில் அமர்ந்து தொடர்ந்து 27 ஆண்டுகள் பதவியில் இருக்கிறது. 7-வது முறையாக இந்த தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளது.
இதற்காக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலம் குஜராத்தில் இன்று முதல் பிரசாரம் செய்ய உள்ளார். அவரது தேர்தல் பிரசாரம் பற்றி பாரதிய ஜனதா பிரமுகர்கள் கூறும்போது, பிரதமர் மோடி இன்று குஜராத் வருகிறார்.
அவருக்கு பாரதிய ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்பு அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து வல்சாத் மாவட்டம் செல்கிறார். வல்சாத் மாவட்டத்தில் உள்ள கப்ரடா கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
அதன்பிறகு தேர்தல் பிரசார பேரணியிலும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாவ் நகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் தந்தையை இழந்த 522 பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். குஜராத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு அங்கு இன்று தான் பிரதமர் மோடி பிரசாரத்திற்கு செல்கிறார்.
பிரதமர் மோடி முதல் முறையாக இன்று பிரசாரம் தொடங்க இருப்பதை தொடர்ந்து அங்குள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
