
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், ” பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது.
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து, கைவிட்டார்கள்.
அதனை கையில் எடுத்து இந்த படத்தை உருவாக முக்கிய காரணமாக இருந்த லைகா குழும தலைவர், எங்கள் அண்ணன் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தினமும் இது குறித்த தகவல்களை ஆர்வமுடன் கேட்டறிவார்.
அவருக்கு நூற்றுக்கணக்கான தொழில்களும், வணிகமும் இருந்தாலும், திரைப்படத் தயாரிப்பில் வேறு படங்களைத் தயாரித்து வந்தாலும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மீது மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். ‘பொன்னியின் செல்வன்’ படம் தயாரானவுடன், நானும் சுபாஸ்கரன் அண்ணனும் படத்தை பார்த்தோம்.
‘இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும்’ என்றும், ‘இந்த திரைப்படம் வேற லெவலில் ரீச் ஆகும்’ என்றும் முழு நம்பிக்கையுடன் பேசினார்.
இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் இந்த திரைப்படத்தை நாங்கள் சொந்தமாக வெளியிட்டோம். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குநர் மணிரத்னம் தான். அவர் இல்லையென்றால் இது போன்ற படைப்பை வழங்கி இருக்க இயலாது. இது எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.
இத்தனை பெரிய வெற்றியை சாத்தியப்படுத்திய பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
