
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இன்று கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடங்கியதாக கூறப்பட்டது.
அதன்படி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் நவம்பர் 7 ஆம் தேதி நுழைந்த ராகுல்காந்தியின் நடைப்பயணம், இன்று அம்மாநிலத்தின் அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் தொடங்கியது.
யாத்திரை தொடங்கிய சில மணி நேரங்கள் கழித்து ஷேகான் நகரை அடைந்தது.
அப்போது மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி யாத்திரையில் கலந்துக்கொண்டு ராகுல் காந்தியுடன் நடைப்பயணம் மேற்கொண்டார்.

