பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை எனக்கு பதவி ஆசை இல்லை அப்படி பதவி ஆசை வந்தால் நான் பைத்தியக்காரன் -ரஜினி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி தனித்து போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.
இன்று ரஜினி பேசுகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிப்பேன். தமிழகம் முழுக்க 234 தொகுதியிலும் போட்டியிடுவேன்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.
நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் நான் முடிவெடுப்பேன். பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா. அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன். நான் ஆன்மீகவாதி என கூறுவதற்கு தகுதியற்றவன். பதவி ஆசை இருந்திருந்தால் 1996லேயே பதவி என்னை தேடி வந்தது. ஆனால் நான் விரும்பவில்லை என்றார்
எப்போதும் அரசியலை கண்டு பயந்ததில்லை. நான் பயப்படுவதே இந்த மீடியாக்களை பார்த்து தான். அரசியல் ஜாம்பவான்களே மீடியாக்கள்ன்னா பயப்படுகிறார்கள், நான் இதில் கத்துக்குட்டி. திடீரென மைக்கை நீட்டி அவர்கள் எதாவது கேள்வி கேட்க, நான் எதாவது பதில் சொல்ல அது மிகப்பெரிய விவாதப்பொருளாகி விடுகிறது.
அதனால் தான் நான் மீடியாவை கண்டு பயப்படுகிறேன். என்னுடைய அரசியல் குரு சோ கூட, மீடியாக்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுரை கூறியுள்ளார். அதனை ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இப்போது இல்லை, அவர் இருந்திருந்தால் இப்போது எனக்கு பத்து யானை பலம் இருந்திருக்கும், ஆனால் அவர் இல்லாதது இழப்பு தான், என ரஜினி வருத்தம் தெரிவித்தார்.