
கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’.
ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்சியுடன் அவருக்கு இது முதல் படம்.

நடிகர் விஷால் பேசும்போது,
“இப்போது படைப்பாளிகளுக்கு சுதந்திரம் கொடுத்து படம் தயாரிக்கும் ஜெமினி போன்ற நிறுவனங்கள் இங்கே இல்லை. அதனால் ஜெமினி போன்ற நிறுவனங்கள் மீண்டும் பட தயாரிப்பில் முழுமூச்சுடன் இறங்க வேண்டும். இந்த வருடம் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கிறதோ இல்லையோ சிறந்த பாடகர் விருது கிடைக்கும். அதற்கு விஜய் ஆண்டனிக்கு நன்றி. இந்த படத்தில் ஒரு பாடலைப் பாட விஜய் ஆண்டனியும் சுந்தர்சியும் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த பாடலை வழக்கமான ஒரு பாடகர் பாடக்கூடாது.. ஒரு புதியவர் பாட வேண்டும்.. ஆனால் இந்த பாடலை பாடிய பிறகு அவர் வாழ்க்கையில் பாடவே கூடாது என்று பேசிக் கொண்டிருந்தபோது சரியாக நான் உள்ளே நுழைந்தேன். உடனே இவர் தான் அந்த பாடகர் என என்னை முடிவு செய்து விட்டார்கள்.
இந்த படத்தில் நான், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா பங்கு பெற்ற ஒரு 15 மணி காட்சி படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பார்க்கும் அனைவரும் 100% சிரித்துக்கொண்டு தான் வெளியே வருவார்கள். அதற்கு சுந்தர்.சி சாருக்கு நன்றி. குறிஞ்சி பூ 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அதுபோல 12 வருடம் கழித்து இந்த மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. பழைய படம் போலவே இருக்காது. அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்” என்றார்.

