
கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’.
ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது,
“இந்த படத்திற்கு எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்து, எந்த ஒரு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுக்காமல் ஒவ்வொரு பாடலையும் சுந்தர்.சி சார் கூட இருந்தே வாங்கிய விதம் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த படத்தில் பாடலை உருவாக்கும் போது சுந்தர் சி தான் பாடலின் முதல் வரிகளை எல்லாம் எடுத்துக் கொடுப்பார். அப்போது நானும் அவரும் இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான பாடலை உருவாக்க வேண்டும், ஏடாகூடமான வார்த்தைகளை எல்லாம் போட்டு ஜாலியாக இருக்க வேண்டும், மிகப்பெரிய இசை மேதைகள் எல்லாம் இந்த பாடலைப் பார்த்து டென்ஷன் ஆகி இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற அளவுக்கு பேச வேண்டும் என ஒரு பாடலை உருவாக்க முடிவு செய்தோம்.
அதற்காக விஷாலை பாடவைப்பது என முடிவுசெய்தோம். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பார்களே அதே மாதிரி விஷால் சிங்கிள் டேக் பாடகர். ஒரே டேக்கில் சரியாக பாடிவிட்டாரா என்று கேட்காதீர்கள். இந்த பாடலை சொதப்ப வேண்டும் என முடிவு செய்து தான் உருவாக்கினோம். அதனால் விஷால் முதல் டேக்கில் பாடுவதையே ஓகே என எடுத்துக்கொண்டோம். இரண்டாவது டேக்கில் ஒருவேளை நன்றாக பாடிவிட்டால் என்ன செய்வது ? அந்த பாடலை தான் விஷால் பாடியுள்ளார்.
இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தாலும் கூட, ஒரு பிரஷ்ஷான படத்திற்கான விஷுவல்ஸ் அனைத்தையும் சுந்தர்.சி அப்போதே பண்ணியிருக்கிறார். இத்தனை வருடங்கள் தாண்டி இவ்வளவு வெற்றி கொடுத்தும் நீங்கள் எவ்வளவு பணிவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். உங்களை பார்க்கும்போது தான், சீரியஸான படங்களில் இருந்து கொஞ்சம் விலகி கலகலப்பான படங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது. நிச்சயமாக முயற்சிப்பேன். அதேபோல என்னுடைய நண்பன் விஷாலுக்கு வெடி படத்தை தொடர்ந்து நான் இசையமைத்துள்ள இரண்டாவது படம் இது. வெடி படத்தை போல இந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆகும். இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பமாக போய் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த மதகஜராஜா ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும். விஷாலுக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் நான் படம் பண்ணுவேன்” என்று கூறினார்.
நடிகை குஷ்பு பேசும்போது,
“இந்த 30 வருட வாழ்க்கையில் என் கணவர் சுந்தர் சி தூக்கமில்லா இரவுகளை கழித்தது என்றால் இந்த மதகஜராஜா படத்திற்காக தான். இந்த படத்திற்காக அவ்வளவு கடின உழைப்பை எல்லோருமே கொடுத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் நிச்சயமாக இருந்தது. சில நேரங்களில் இந்த படம் ரிலீசாக போகிறது என்று சொல்வார்கள். பின்னர் அது அப்படியே நின்றுவிடும். ஆனால் எது எப்போது நடக்க வேண்டுமோ, எல்லாம் நன்மைக்கே என்பது போல இந்த பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக மதகஜராஜா ரிலீஸ் ஆகிறது. இந்த இந்த படம் துவங்குவதற்கு முன்பு நானும் விஷாலும் தான் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தோம். ஆனால் இந்த படத்திற்குப் பிறகு ஆம்பள, ஆக்சன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற துவங்கியபோது என்னை கழட்டி விட்டு அவர்கள் இருவரும் காதலர்கள் போல மாறிவிட்டார்கள்” என்றார்.
