வியாழக்கிழமை, ஏப்ரல் 16
Shadow

‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்பட விமர்சனம் 3/5

 

‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்பட விமர்சனம்

 

காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜெ.சூர்யா, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால், இனி எந்த காதலர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட கூடாது என்பதற்காக, பல வருட உழைப்பிற்குப் பிறகு 2040 ஆம் ஆண்டில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany – LIK) என்ற செயலியை உருவாக்குகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு பொறுத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்வது முதல், அவர் எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதோடு, 24 மணி நேரமும் அவர்களை கேமரா மூலம் கண்காணிக்கவும் முடியும்.

இதனால், காதலர்களில் யார் ஏமாற்றினாலும், அது அவர்களுக்கு தெரிந்து விடுவதோடு, காதலர்கள் பிரிய நினைத்தால் இழப்பீடு வாங்கிக் கொடுத்து அதை நிறைவேற்றுகிறது இந்த லிக் செயலி. காதலர்களிடம் மட்டும் இன்றி, தம்பதிகளிடமும் பெரும் வரவேற்பு பெற்று வரும் லிக் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் ஒரு வாடிக்கையாளரான நாயகி கிரித்தி ஷெட்டி, சிறு வயது முதலே ஸ்மார்ட்போனின் வழிகாட்டுதலின் மூலம் வளர்வதால், சமூக ஊடகங்களில் அதிக பின்தொடர்பவர்களை பெறுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஸ்மார்ட்போன்கள் மூலம் தங்களுக்கே தெரியாமல் தவறு செய்பவர்களை திருத்துவதற்காக பசுமை உலகம் என்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாத ஒரு இடத்தை உருவாக்கி நடத்தி வருகிறார் சீமான். அவரது மகன் பிரதீப் ரங்கநாதன், தன் அப்பாவின் வழிகாட்டுதலின்படி கைபேசி பயன்படுத்தாத நபராக வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே, கிரித்தி ஷெட்டியை கண்டதும் காதல் கொள்ளும் பிரதீப் ரங்கநாதன், அவருக்காக தன் அப்பாவுக்கு தெரியாமல் கைபேசி வாங்குவதோடு, அதன் மூலம் லிக் செயலியில் தன்னை இணைத்துக் கொண்டு கிரித்தி ஷெட்டியுடன் தொடர்பையும் ஏற்படுத்தி கொண்டு நட்பாக பழகுகிறார். அவர்களது நட்பு காதலாக மாறும்போது, எந்த செயலி அவர்களை சேர்த்து வைத்ததோ அதே செயலி கொடுத்த தவறான தகவலால் கிரித்தி ஷெட்டி காதலை முறித்துக் கொண்டு பிரதீப்பை விட்டு பிரிந்து விடுகிறார்.

இதனால், கடும்கோபம் அடையும் பிரதீப் ரங்கநாதன், தன் இதயத்தில் இருக்கும் கிரித்தி ஷெட்டி மீதான காதலை தவறான தகவல்கள் மூலம் குறைத்து மதிப்பிட்ட லிக் செயலி போலியானது என்பதை நிரூபிக்க முடிவு செய்கிறார். ஆனால், தன் லிக் செயலியின் தகவல்கள் சரியானது என்று வாதிடும் எஸ்.ஜெ.சூர்யா, 30 நாட்களுக்குள் கிரித்தி ஷெட்டியை காதலிக்க வைத்து விட்டால், தன் செயலி தவறு என்பதை ஏற்றுக் கொள்வதாகவும், அது நடக்கவில்லை என்றால் தன் செயலி சிறந்தது என்பதை ஏற்றுக்கொண்டு அதை உலகிற்கு அறிவிக்க வேண்டும், என்று பிரதீப் ரங்கநாதனுக்கு சவால் விடுகிறார். அவரது சவாலை ஏற்றுக்கொள்ளும் பிரதீப் ரங்கநாதன், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பதை தொழில்நுட்பம் தரும் தகவல்களுக்கும், மனித உணர்வுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் விதமாக சொல்வதே ‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி).

பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல் தான் ஏற்றிருக்கும் எளிமையான கதாபாத்திரத்திற்கு தனது தனித்துவமான மேனரிசம் கலந்த நடிப்பின் மூலம் பெரும் வலிமை சேர்த்திருக்கிறார். கண்டதும் காதல் என்றாலும், தன் காதலி மீது தான் வைத்திருக்கும் அன்பை அவர் வெளிக்காட்டும் காட்சிகள் நகைச்சுவையாக கடந்தாலும், அதில் இருக்கும் காதல் உணர்வை, தன் கண்கள் மூலமாக வெளிக்காட்டும் இடங்களில் அசத்தியிருக்கிறார். காதல் வலியை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், காதலுக்காக தன்னம்பிக்கையோடு போராடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருப்பதோடு, அதை மாஸாக கையாண்டு தன் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் செல்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, அதிகப்படியான மேக்கப்போடு வலம் வந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது. அவரது மேக்கப் மற்றும் ஆடை வடிவமைப்பு அவரை பாபி பொம்மையாக வலம் வர செய்து பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது. நடிப்பிலும் தனது பணியை சரியாக செய்திருக்கும் கிரித்தி ஷெட்டி, சமூக வலைதள மோகம் மற்றும் தாய் பாசத்திற்கான ஏக்கத்தை தன் கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

லிக் செயலியின் நிறுவனராக, மனித காதலுக்கும், உணர்வுகளுக்கும் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜெ.சூர்யா, தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மட்டுமே கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். தன் செயலிக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முயற்சியும், அதில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் அவரது துள்ளல் மனநிலையும் பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது.

பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக அன்பு கடல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீமான், தன் இயல்பான உணர்வுகளை நடிப்பாக வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். அவர் சொல்லும் அறிவுரைகளும், எதிர்பார்க்கும் மாற்றங்களும் மனித குலத்தின் மகத்துவத்தை பாதுகாப்பதற்கான வழிகள் என்பதை மக்களுக்கு புரிய வைக்கிறது.

தோற்றத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் யோகி பாபு, நடிப்பிலும், நகைச்சுவையிலும் எந்த மாற்றத்தையும் வெளிக்காட்டவில்லை. முதல் முறையாக கவர்ச்சியான உடைகளோடு வலம் வரும் கெளரி கிஷன் தாக்கம் ஏற்படுத்தாத வேடத்தில் வலம் வருகிறார். பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்திருக்கும் ஷாரா கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோர் திரையில் முகம் காட்டியிருக்கிறார்கள்.

ரவி வர்மனின் ஒளிப்பதிவு படத்திற்காக செய்யப்பட்டிருக்கும் செலவுகளை திரையில் கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமான பின்னணியோடு காட்சிப்படுத்தப்பட்டு கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறது.

அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்ட உணர்வுகளை தருவதோடு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பயணிக்கிறது. பின்னணி இசை கலர்புல் காட்சிகளுக்கு ஏற்றபடி கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்தாலும், மனதில் நிற்க மறுக்கிறது.

கலை இயக்குநர் கண்னன்.எஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் தங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் பிரவீன்ராஜா, ரினிபாந்த், ஜேகட்லீரிண்டியா, ஷங்ரீஹான் கே.எஸ் ஆகியோர், எதிர்காலத்தின் முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் திரையில் கொண்டு வந்த விதம் மனதில் மாயாஜாலத்தை ஏற்படுத்துகிறது.

எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவன், எதை கேட்டாலும் கொடுக்கும் தொழில்நுட்பங்கள் உண்மையான காதலை கொடுக்குமா? அல்லது அதன் மூலம் மனிதர்களிடம் இருக்கும் உண்மையான காதலை அறிந்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்விகளுக்கான விடையை கமர்ஷியல் மற்றும் கலர்புல்லான படமாக மட்டும் இன்றி அதை காதல் உணர்வோடு சொல்ல முயற்சித்திருக்கிறார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பின்னணியோடு கதை சொல்லியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், காட்சியமைப்புகள் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தி, திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார்.

 

 

29 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன