செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

தலைமை முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.! – ரஜினி எச்சரிக்கை!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அரசியலில் களம் காண உள்ள ரஜினி, முற்கட்டமாக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் மன்றத்தின் விதிகளுக்கு மாறாக செயல்படுவதாக கூறி ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்புராஜ் இடைக்கநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி மக்கள் மன்றத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ரஜினியின் அறிவுரைப்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம்.சுதாகர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், தம்புராஜ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்காமல் தனக்கு விருப்பமானவர்களை மட்டும் அழைத்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுடன் ஒற்றுமையா செயல்பட அறிவுறுத்தியது. சென்னை தலைமை மன்றத்திற்கு இரண்டு முறை அழைத்த போதும் அவர் வராமல் வேறு ஒருவரை அனுப்பி வைத்தார். தன்னலமற்ற மக்கள் சேவை என்ற புனிதமான உயர்ந்த எண்ணத்தோடும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் துவங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.

பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாத பட்சத்தில் மன்றத்தில் நற்பெருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதும் மக்கள் விரோத செயல் என்பதால் அவை ஒருபோதும் அனுமதிக்கப் பட மாட்டாது. அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை.மன்றத்தின் உள் விவகாரங்களை நமக்குள் விவாதிப்பதை விடுத்து, அதை பிரச்சாரம் செய்து அதில் ஆதாயம் தேட முயற்சிப்பது ஆரோக்கியமான செயல் அல்ல. தலைமை எடுத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர்போன ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.ஒற்றுமையாக செயல்பட்டு கொடுக்கப்பட்ட பணியை செய்வதே நமக்கும், மன்றத்திற்கும் நல்லது, பெருமை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

244 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன