
விளையாட்டை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் படங்கள் தொடர்ந்து வந்தாலும் அதில் புதுசாக கதைக்களம் பார்க்கும் படங்கள் ரொம்ப குறைவு.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் படம் விளையாட்டை தொட்டிருந்தாலும் முடிவை அழகாக சொல்லியிருக்கிறது.
வடசென்னையில் வசிக்கும் மனோஜ் எப்படியாவது கால்பந்தாட்டத்தில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்கிறார். ஒரு சூழலில் வடசென்னை தாதாவின் பழக்கத்தால் பாதை மாறி போக… திடீரென விளையாடும் போதே இறந்து போகிறார்.
அப்பாவை போல மகனும் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரராக வரும் நேரம் ஒரு சூழலில்அப்பாவின் மரணம் இயற்கையானது இல்லை. அவரை கொலை செய்தார்கள் என தெரிய வருகிறது. அப்பாவை கொலை செய்தவர்களை ஹீரோ விஷ்வா தேடி கண்டு பிடித்து பழி வாங்கினாரா? இல்லை வன்முறை பாதை வேண்டாம் விளையாட்டில் அப்பாவின் கனவை நனவாக்கும் வேலையை செய்தாரா? என்பதுதான் சாம்பியன் கதை.
வடசென்னை மக்களிடம் எத்தகைய திறமைகள் இருந்தாலும் அவர்களின் மேல் உள்ள வன்முறை முத்திரை அகலாதவரை அந்த திறமைசாலிகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள். அதை ரொம்ப அழகாக வலியோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
அறிமுக நடிகர் விஷ்வா நிஜத்தில் நல்ல நீச்சல் வீரர் எனபதால் விளையாட்டு வீரரின் தோற்றத்தில் பொருந்தி போகிறார். இன்னும் பயிற்சி எடுத்தால் சினிமாவில் அடுத்த கட்டம் நகரலாம்.
வழக்கமாக இது போன்ற விளையாட்டு படங்களில் எப்படியும் கடைசியில் ஹீரோ வெற்றி கோப்பையை வாங்கி கொள்வார்… ஆனால் அதிலும் இயக்குனர் சுசீந்திரன் புது டிவிஸ்ட் வைத்திருக்கிறார் அதற்காக சுசீந்திரனுக்கு ஒரு சபாஷ்.
நரேன் கதாபாத்திரமும் மனசில் நிற்கிறது. மனோஜின் நண்பனாக வரும் வினோத் கதாபாத்திரம் இயல்பான நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. நண்பனை தன் கண் முன்னே கொன்றதை பார்த்து குடித்து குடித்து மனம் வெதும்பும் காட்சிகளிலும் கடைசியாக வில்லனிடம் சிரித்தபடியே சவால் விடும் காட்சிகளிலும் வினோத் பிரமாதம் போய்யா… சாக்கடையில் உயிரற்ற உடலாக… யாருய்யா நீ… இவ்ளோ நாளா எங்கய்யா இருந்தன்னு கேட்க வைக்கும் யதார்த்த நடிப்பு… சபாஷ் வினோத்.
சமீபத்தில் வரிசையாக கால்பந்தாட்ட படங்கள் வந்து போனதால் நல்ல யதார்த்தமான கதையோடு வந்தாலும் சாம்பியன் வெற்றிக்கு போராடதான் வேண்டும்.
