டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்தது. பா.ஜனதா 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. அந்த கட்சியை சேர்ந்த 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், அந்த கட்சினர் பா.ஜனதா வெற்றியடையாததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த டுவிட்டர் பதிவை வைத்து காங்கிரசை கேலி செய்யும் விதமாக ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை, உங்களை தோற்கடித்ததற்காக இந்த நன்றியா என்று பலர் கேலி விமர்சனங்களை முன்வைத்தனர்.
ப.சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக விமர்சனங்கள் ஒரு பக்கம் பறந்து கொண்டிருக்க முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும், டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி, நேரடியாகவே பா.சிதம்பரத்தை எதிர்த்து காட்டமான விமர்சனத்தை பதிவு செய்தார்.
With due respect sir, just want to know- has @INCIndia outsourced the task of defeating BJP to state parties? If not, then why r we gloating over AAP victory rather than being concerned abt our drubbing? And if ‘yes’, then we (PCCs) might as well close shop! https://t.co/Zw3KJIfsRx
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) February 11, 2020
அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து உள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடுகிறீர்கள். உங்களுக்கான மரியாதையை கொடுத்து கேள்வி ஒன்றை கேட்கிறேன். பா.ஜவை தோற்கடிக்கும் பணிக்காக காங்கிரஸ், மாநில கட்சிகளை வெளிப்பயணியாளர்கள் அடிப்படையில் நியமனம் செய்துள்ளதா? அப்படி இல்லையென்றால் நம்முடைய தோல்வியை பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என்னுடைய கேள்விக்கு ‘ஆம்’ என்பது பதிலாக இருந்தால், நாம் ஏன் மாநில காங்கிரசை கலைக்கச் செல்லக்கூடாது! என பதிவிட்டார்.
இந்த விவகாரம் தான் டெல்லி காங்கிரசில் இப்போதைய ஹாட் டாப்பிக்.