
விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் – கோர்ட்டுக்கு போன கமல்
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது.
இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் திடீரென உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார்.
விபத்து நடந்தது குறித்து மீண்டும் மீண்டும் நடித்துக்காட்டச் சொல்லி மத்திய குற்றப்பிரிவினர் வற்புறுத்துவதாக கமல் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
