
கொரோனாவுக்கு சிகிச்சையளித்து பலியாகும் மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களுக்கான இறுதி மரியாதை போல கவுரவம் தர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
சென்னையில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இன்னும் அதிக வேதனையை அளிக்கிறது. கொரானாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்த மருத்துவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகளை இழைப்பது கண்டிக்கத்தக்கது.
போர்க்காலங்களில் நாட்டைக் காக்க தங்களின் உயிரை பணயம் வைத்து போர் புரிபவர்கள் நமது ராணுவ வீரர்கள்தான். அதேபோல், கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரானா வைரஸ் கிருமியை எதிர்த்து களத்தில் நின்று போராடுபவர்கள் மருத்துவர்கள்தான். அவர்களை நாம் கடவுளாக பார்க்க வேண்டும். அவர்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. நாட்டைக் காக்கும் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்கிறோம். அதேபோல், மக்களைக் காக்க கொரானாவுடன் போரிட்டு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறோமோ, அதேபோல் இறுதி மரியாதை செய்ய வேண்டும்.
ஒருவேளை அந்த அளவுக்கு பெரிய மனசு இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் மனிதர்களாகவாவது கருதி மருத்துவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
