வியாழக்கிழமை, மே 16
Shadow

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற வெள்ளைக்கார போலீஸ்… வெடித்த வன்முறை!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் பதற்றம் அதிகரிப்பு. பல இடங்களில் வன்முறை தொடங்கியது.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ந் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிராகவும் , அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களின் போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தற்போதும் அமெரிக்காவின் பல நகரங்களில் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த சூழலில் மேலும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் அமெரிக்காவில் மேலும் பதட்டம் அதிகரித்து உள்ளது.

இந்த கொலைச் சம்பவம் அது பெரும் அதிர்ச்சியையும் கறுப்பின மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டா வை சேர்ந்த 27 வயதான ரேய்ஷர்ட் புரூக்ஸ் என்ற கருப்பரின வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அட்லாண்டாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் கார்கள் நிறுத்துமிடத்தில் ரேஷர்ட் புரூக்ஸ் தனது காரிலேயே தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மற்ற வாடிக்கையாளர்கள் வருகையை அவர் வேண்டுமென்றே தடுப்பதாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் ரேஷர்ட் புரூக்சை கைது செய்த முயற்சித்தனர். அப்போது அவருக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.


போலீசார் அவரை விரட்டி சென்றனர். அப்போது ஏற்பட்ட ஒரு சூழலில் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் அந்த கருப்பின வாலிபர் சுருண்டு விழுந்து பலியானார்.

ரேஷர்ட் புரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து அட்லாண்டா நகரில் பெரும் போராட்டம் வெடித்ததது.

ரேஷர்ட் புரூக்ஸ் நபர் சுடப்பட்ட இடத்தில் உள்ள வெண்டி உணவு விடுதியை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். நெடுஞ்சாலையில் போக்குவரத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.


இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அட்லாண்டா நகரின் தலைமை போலீஸ் அதிகாரி எரிகா ஷீட்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கருப்பின வாலிபரை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டாராம் .

ஏற்கனவே ஒரு கருப்பின வாலிபர் கொலையால் ஏற்பட்ட வன்முறை கலவரங்களை அடக்க முடியாமல் பல இடங்களில் போலீசார் போராட்டகாரர்கள் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானது அதிபர் டிரம்ப்புக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் அனைத்தும் வரும் அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக அமையும் என தெரிகிறது.

351 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன