
துப்பாக்கி சூடு விவகாரத்தில கைது செய்யப்பட்ட திமுக எம் எல்.ஏவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர்,திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், செங்காடு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக இன்று இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த சண்டையில் இமயம் குமாருடன் வந்த கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.
இந்த சண்டையில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இந்த கோஷ்டி மோதல் தொடர்பாக எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட செங்கல்பட்டு நீதிமன்றம் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 7 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 7 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
354 Views
