வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

 

 

ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

இந்தியாவில் கொரானா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது.

இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரானா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.

எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி இருந்தார்.

அடுத்த சில மணி நேரத்தில் அமிதாப் பச்சனின் மகனும், பிரபல நடிகருமான 44 வயது அபிஷேக் பச்சனும் தனக்கு கொரானா பாதிப்பு இருப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்டார். தனக்கும், தனது தந்தைக்கும் நோய்த் தொற்றின் தாக்கம் லேசாக இருப்பதாகவும், அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் அதில் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் இருவரும் மும்பை வில்லேபார்லேயில் உள்ள நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அமிதாப்பச்சனின் மனைவி நடிகை ஜெயாபச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், அவரது 8 வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரானா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஜெயாபச்சனுக்கு கொரானா பாதிப்பு இல்லை என தெரியவந்து இருப்பதாகவும் மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் நோய்த் தொற்று அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொற்றுக்கு ஆளாகாத ஜெயா பச்சனும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

மும்பை ஜூகு பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா முன்பும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அந்த பங்களாவிலும், அமிதாப்பச்சனின் அலுவலகத்திலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். அத்துடன் அந்த பங்களா ‘சீல்‘ வைக்கப்பட்டு, அது தொடர்பான அறிவிப்பு பேனரும் அங்கு வைக்கப்பட்டது.

ஏற்கனவே நடிகர் அமீர்கான், டைரக்டர் கரண் ஜோகர், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் வீடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரானா ஏற்பட்டு இருப்பது இந்திப்பட உலகினரிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். அப்போது, அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அமிதாப்பச்சன் உடல் நல பிரச்சினையில் இருந்து மீண்டு வருவார். இந்திய மருத்துவர்களை நம்புகிறேன்“ என்று கூறி உள்ளார்.

548 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன