
முதல்கட்ட வெற்றியால் வைரஸ் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனைக்கு ரெடியான ரஷ்யா!
உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி வரும் கொரானா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி உலகின் பல நாடுகளில் நடந்து வருகிறது. இந்தியாவிலும் நடந்து வருகிறது.
இதற்கிடையே, ரஷியாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொரானா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த மாதம் 18-ந் தேதி, மனிதர்களிடம் முதல்கட்ட பரிசோதனை நடத்தியது. அச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதல் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றதால் 2-ம் கட்ட பரிசோதனைக்கு ரஷ்யா தயாராகி உள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியதாவது:-
தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. 28-ந் தேதிக்குள் அதை முடித்து விடுவோம்.
அதன்பிறகு, எங்கள் தடுப்பூசியை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தாக்கல் செய்வோம். இதற்கு தேவையான ஆவணங்களை ஏற்கனவே சேகரிக்க தொடங்கி விட்டோம்.
ஆகஸ்டு மாத மத்தியிலேயே சிறிதளவு தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில், இந்த தடுப்பூசியை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய தொடங்கும்.
சுகாதார மையங்களில் ரஷிய மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று நம்புகிறோம்.
