
கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்!
திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள நிலத்திற்கான பாதை குறித்த முன்விரோதத்தில் எம்.எல்.ஏவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இமயம் குமார் என்பவருக்கும் மோதல் வெடித்துள்ளது. அப்போது துப்பாக்கியால் எம்.எல்.ஏ தரப்பு சுட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தலா 11 பேர் என 22 பேரை இதுவரைக்கும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டென்று எடுத்து தற்காப்புக்கு பயன்படுத்தப்படும் 7.65 hand pistol என்று சொல்லப்படும் கைதுப்பாக்கியை திமுக எம்.எல்.ஏ குடும்பத்தினர் 2010 ஆம் ஆண்டு முறையாக வாங்கியுள்ளனர்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் அந்த கைதுப்பாக்கியின் லைசென்ஸ் காலாவதி ஆகிவிட்டது என்றும் லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை என்றும் கூறுகிறது காவல்துறை.
long range சிங்கிள் பேரல் துப்பாக்கி என்று அழைக்கப்படும் ஒற்றைக்குழல் துப்பாக்கி ஒன்றையும் இதயவர்மனிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கியின் லைசென்ஸ் கடந்த 2019 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது என்றும் லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல், எம்.எல்.ஏ இதயவர்மனின் அலுவலகத்திலிருந்து Long range ஏர் ரைபில் என்று அழைக்கப்படும் வெகு தொலைவில் உள்ள பொருட்களை குறிவைத்து சுடப் பயன்படும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏர் ரைபிலுக்கும் எம்.ஏல்.ஏ தரப்பு உரிய லைசென்ஸ் பெறவில்லை என்கிறது காவல்துறை.
ரியல் எஸ்டேட் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் இந்த இரண்டு தரப்புக்குமிடையில் மோதல் வெடிக்க, தனியார் நிறுவனத்திற்கு பெரிய பரப்பளவிலான நிலம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன்பகையே காரணம் என்றும் போலீசார் கூறுகின்றனர்
