வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!

 

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் 2021 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை டி.ஜ.ஜி.யாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி, சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருந்ததாகவும், இதற்காக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவருக்கு ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டார். இது கர்நாடகம், தமிழகம் தாண்டி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில், சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது அம்பலமானது. அதோடு லஞ்ச புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சூழலில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று சமீபகாலமாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதுபற்றி பா.ஜ.க நிர்வாகி ஒருவரே சமீபத்தில் டுவிட்டர் பதிவு ஒன்று போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

காரணம் கர்நாடகத்தில் பாஜக அரசுதான் பதவியில் இருக்கிறது.

இதையடுத்து சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்ற விவாதங்கள் பலமாக எழும்பியது.

இந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக சசிகலா சட்டவிரோதமாக சிறையில் பெற்ற சலுகைகளை அம்பலப்படுத்திய கண்டிப்பான பெண் போலீஸ் அதிகாரி ரூபா அந்த மாநிலத்தின் அதிகாரமிக்க பதவியான உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால், உள்துறை செயலாளர் தான் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன்படி பார்த்தால், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய ரூபா பரிந்துரை செய்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்விக்குறி?

இதனால், சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து மாநில அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசு தமிழக தேர்தலை முன்னிறுத்தி சசிகலா விடுதலை விவகாரத்தை கையில் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

234 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன