
சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை செய்து வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி என அடுத்தடுத்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தத் தேர்தலின் போது, எம்ஜிஆரின் மடியில் தவிழ்ந்து வந்தவன் எனக் கூறி ஆக்ரோஷமாக பேசி வருகிறார் கமல்ஹாசன். மேலும், அரசியலில் தன்னை யாரும் இயக்கவில்லை, யாராலும் இயக்கவும் முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் தேர்தல் வாக்குறுதியை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தமிழிலக்கியத்தின் தலைமகன் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் ஒரு சிலை அமைக்கவேண்டும் என்பது பல தசாப்தங்களாக நீடிக்கும் கோரிக்கை. ஒரு தெருவிற்கு அவர் பெயர் வைப்பதற்கே 72 ஆண்டுகள் இவர்களுக்குத் தேவைப்பட்டது.எங்கள் ஆட்சியில் புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
