சனிக்கிழமை, மே 4
Shadow

நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது எப்படி பரபரப்புடன் அவரது செய்கைகள் இருந்ததோ அதே போல அவர் மரணத்திற்கு பிறகும் அவர் குறித்த செய்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை என்கிற அளவுக்கு பரபரப்புகள் வந்து கொண்டேதான் இருக்கிறது.

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியுள்ளார்.

ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இதுகுறித்து  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், அவர் என் தாய்தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

‘1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்பு தாய் சைலஜா 2015-ல் இறந்துவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20-ம்தேதி இறந்துவிட்டார்.  ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும்’ எனவும் அம்ருதா கூறியுள்ளார்.

அம்ருதாவின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது. நீதிபதி மதன் பி  லோகூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஆய்வு செய்கிறது. அப்போது, அம்ருதாவின் மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது தெரியவரும்.

அம்ருதா  ஏற்கனவே இது தொடர்பாக    ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 1960-ம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா- ஜெயராம் தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர். அவர் மகள் தான் நான். என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா என்றும், அம்மு என்றும் என்னை செல்லமாக அழைப்பர். பெற்றோரை இழந்த பின் என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார். அவர் பராமரிப்பில் என் தாயார் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்தனர் என்றாலும், சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால், திருமணம் நின்று போனது.
கர்ப்பமாக இருந்த என் தாய், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி என்னை பெற்றெடுத்தார். சம்பிரதாயமிக்க குடும்பம் என்பதால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் என் தாய் ஒப்படைத்தார். பெங்களூருவில் பணியாற்றி வந்த சைலஜா-சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். ஆனால், ஜெயலலிதாவின் மகள் என்ற ரகசியத்தை எங்கும் கூறவில்லை. அவர்களிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
1996-ல் என்னிடம் ஒரு சீட்டு எழுதி கொடுத்த சைலஜா சென்னை சென்று ஜெயலலிதாவை சந்தித்து வரும்படி கூறினார். நானும், போயஸ் கார்டனுக்கு சென்று அவரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் வாரி அணைத்து பாசத்தை காட்டி உபசரித்தார். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதன் பின் பலமுறை அவரை சந்தித்தேன். ஆனால் ஒரு முறை கூட என் சொந்த தாய் என்று கூறியதில்லை. எந்த காரணத்தினாலும் அரசியலுக்கும், சினிமாவுக்கும் வரவேண்டாம் என என்னை எச்சரித்திருந்தார்.
ஜெயலலிதா இறந்த பின் தீபா, தீபக் ஆகியோர் தான் என் அம்மாவின் சொத்துக்கு வாரிசுதாரர்கள் என செய்தி வெளியானது. இதை பார்த்த அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினார். பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார். நான் பிறந்தபோது ரஞ்சினி ரவீந்திரநாத், லலிதா ஆகியோரும் என் தாயாரை பராமரித்துள்ளனர்.
அவர்களுக்கு என் பிறப்பு ரகசியம் தெரிந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல. உடல் நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார். எனவே, சசிகலா நடராஜன், தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
என் தாய் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலா உள்பட பலரும் காரணம். இது தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ., சிறப்பு குழு விசாரணை நடத்த வேண்டும். இறப்பின் காரணத்தை தெரிந்து கொள்ள அவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். என் தாய், அவர் தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. என்னும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மஞ்சுளா கூறியுள்ளார்.

 

252 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன