
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
நாளை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப்பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள
அவரின் திரு உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள்,
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்
ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்
தமிழக மக்களால் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும்
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள
நாவலப் பிட்டியில். 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ல் பிறந்தார்.
தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கி பின்னர்
இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார்.
1936-ம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி,
தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்தாலும், 1950-ம் ஆண்டு
முத்தமிழறிஞர் கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய
மருதநாட்டு இளவரசி மற்றும் மந்திரிகுமாரி திரைப்படங்களின் வாயிலாகத்
திரையுலகில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றதோடு,
தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த்திரைப்பட உலகின்
முடிசூடா மன்னனாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.
அவர் நடித்த பல படங்களுக்குத் தேசிய விருதுகளும்,
தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவால் ‘இதயக்கனி‘ என்றும்,
முத்தமிழறிஞர் கலைஞரால் வழங்கப்பட்ட ‘புரட்சி நடிகர்’ என்கிற பட்டமே
பின்னாளில் புரட்சித் தலைவர் என்று நிலை பெற்றது.
அவரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி,
அவரின் மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் காந்திய வாதியாகத் திகழ்ந்தாலும், தந்தை பெரியார்,
பேரறிஞப் பெருந்தகை ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு,
1953-ம் ஆண்டு தன்னைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
தான் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
1962-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சிறுசேமிப்புத்திட்டத் துணைத் தலைவராக,
1967-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக, 1969-ல் திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளராக,
முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற நண்பராகத் தனது அரசியல் வாழ்வினைத் தொடங்கியவர்,
பின்னாளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற தனி இயக்கம் கண்டு,
1972-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து
1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று
முதல் முறையாக முதல்-அமைச்சர் ஆகப்பொறுப்பேற்றார்.
1977 முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள்
மூன்று முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பதவி வகித்தார்.
முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோர் நலம் பெறுகின்ற வகையில்,
நல்ல பல திட்டங்களைச் செயல் படுத்தினார். இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால்
போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின்
காரணமாக அவர் நடத்திய 5-ம் உலகத்தமிழ் மாநாடு, 1981-ம் ஆண்டு
தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக் கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை,
காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கிடும் திட்டம்,
சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை.

அரசியலில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், தன் வாழ்நாளின்
இறுதிவரையில் முத்தமிழறிஞர் கலைஞருடனான உயர்ந்த,
உன்னதமான நட்பினை என்றும் போற்றி வந்தவர்.
அவரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில்,
முத்தமிழறிஞர் கலைஞர் 17.1.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார்.
அந்த விழாவிலே, “தனிப்பட்ட முறையிலே எனக்கும்
என அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,
எனக்கும் அவருக்குமான நட்புணர்வை, என்னையும் அவரையும் மிகச் சரியாகப் புரிந்து
கொண்டவர்களால் மட்டுமே தெரிந்திருக்க முடியும்“ என்று நட்புணர்வோடு குறிப்பிட்டார்.
மேலும், சென்னை கிண்டியில் அவரால் உருவாக்கப்பட்ட மருத்துவப்பல்கலைக் கழகத்திற்கு
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு,
அவரின் திருவுருவச்சிலையினையும் 1998-ம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின்
நினைவினைப் போற்றுகின்ற வகையில், அவரின் 105-வது பிறந்த நாளானது (ஜனவரி17)
தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
464 Views

