
தமிழகத்தில் இன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, நடைபயணம், பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 26 ஆயிரத்து 981 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
பருத்தி மற்றும் நூல் விலைஉயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 24-ம் தேதி வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா தங்க நகை மாளிகை ஆகிய கடைகளுக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் போலீசார் – பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய காவல் ஆணையம் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் நாளை மறுதினம் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கொரோனா தொற்றால் கடந்த 8 மாதங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக தற்போது குறுஞ்செய்தி வந்திருப்பது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
கோயில்களுக்கு பக்தர்கள் தானமாக அளிக்கும் பசுக்களை மறுதானம் செய்வதற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் என இரண்டுமே வழங்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் முகக் கவசம் அணியாமல் சென்ற சட்டக்கல்லூரி மாணவர், தாக்கப்பட்ட விவகாரத்தில், காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணமோசடி விவகாரத்தில் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் ஹரிநாடார், நடிகைக்கு மிரட்டல் விடுத்த புகாரில் திருவான்மியூர் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஆபத்தை விளைவிக்கும் போலி பொம்மைகளை விற்பனை செய்து வந்த கடையிலிருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியவகை மரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சரணாலயத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 8 செவிலியர்கள், 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மதுரை அலங்காநல்லூர் அருகே கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவிற்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருவதாக நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், தொப்பையாறு அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்துவிட்டார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மீண்டும் கையில் எடுத்திருப்பதால், தூத்துக்குடி மாவட்ட பனை ஓலைக்கொட்டான் தயாரிப்பு தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாலாற்றில் பட்டப்பகலில் மணல் கொள்ளையடிக்கப்படுவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் மின்சாரம் தாக்கி யானை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்த விவகாரத்தில், மின்சார வாரியத்திற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மாட்டிற்கு மரியாதை செலுத்திய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை அந்த மாடு முட்ட வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தின் புதிய சீருடையை அணிந்து கொண்டு ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே, ராணுவ கிழக்கு பிராந்தித்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
