
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் ஒரு குளுமை நிறைந்த சர்வதேச சுற்றுலாத் தலமாகும்.
இங்கு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் கடும் உறைபனி பொழிவு காணப்படும்.
இந்நிலையில் கடந்த வருடம் பெய்த தொடர் மழையின் காரணமாக உறைபனி காலமானது தாமதமாக துவங்கியது.
மேலும் டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் மட்டும் உறை பனியானது சில நாட்கள் மட்டும் நிலவியது.
அதன்பின் கடும் குளிர்,சாரல் மழை மற்றும் மிதமான வெப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் வரை நிலவியதால் மலைப்பகுதி முழுவதும் குளிர் நிலவி வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் 9 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டு கடும் குளிர் நிலவியதால் பசுமைப்புற்களின் மேல் விழுந்த நீர்ப் பனித் துளிகள் உறைந்து உறைபனியாக மாறியது.
இந்த உறைபனியானது கொடைக்கானல் நீர்பிடிப்புப் பகுதியான கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா, கால்ப்கிளப் உள்ளிட்ட பல்வேறுப்பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டது,
மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள பசுமையான புற்களின் மேல் உறைபனி பொழிவு இருந்ததால் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது, கொடைக்கானலில் நிலவி வரும் கடும் குளிரினால் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் இந்த அழகிய ரம்மியமான காட்சியினை பார்த்து செல்கின்றனர்.
உறைபனி மற்றும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் நிலவி வரும் குளிரை சமாளிக்க காலை வேளையில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருவதுடன் குளிரை தாங்கும் ஸ்வெட்டர், ஜர்க்கின் உள்ளிட்ட குளிரை சமாளிக்ககூடிய ஆடைகளை அணிந்து நடமாடி வருகின்றனர்.
மேலும் பனியானது ஏரியில் ஆவியாக செல்லும் போது ரம்மியமாக காட்சியளிப்பதை நடைப்பயிற்சியில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்
