
ஆன்மீக சுற்றுப்பயணமாக திருச்செந்தூர் வந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா சந்தித்து பேசியது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார்.
இதனையடுத்து கார் மூலம் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா சசிகலாவை சந்தித்தாா். அப்போது சசிகலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சந்திப்பதாக தெரிவித்து கோவிலுக்கு சென்றார்.
பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு 9.40 மணிக்கு தனியார் விடுதியை வந்தடைந்தார் . சுமாா் 3 மணி நேரம் காத்திருந்த ஓபிஎஸ் சகோதரர் ராஜா தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலாவை சந்தித்தாா்
இந்த சந்திப்பானது இரவு 10 மணிவரை சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டனர் ஆலோசனை முடிந்த பிறகு ராஜா செய்தியாளர்களை சந்திக்க மறுத்தபடி புறப்பட்டுச் சென்றார்.
ஓபிஎஸ் சகோதரர் ராஜா சசிகலாவை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தன் ஆதரவாளர்களுடன் சேலத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்களும், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆன குமாரபாளையம் தங்கமணி, பவானி கருப்பண்ணன் சேலத்தில் சந்திப்பு நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
இந்நிலையில், திருவண்ணா மலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, ‘அதிமுவின் உட்கட்சி பிரச்சனைகளில் கருத்து சொல்ல விரும்பவில்லை.
தேனியில் அதிமுகவினர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்து கேள்விப்பட்டேன். அதிமுகவின் நிர்வாகிகள் பலரும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
எதற்காக இதுபோன்ற நிகழ்வுகள் போகிறது என்று தெரியவில்லை. அதிமுகவில் தற்போது சுய பரிசோதனை தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாக அதிமுக ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்த பிறகுதான், அதிமுகவில் இணைவது குறித்து கருத்து சொல்ல முடியும்’ என்றார்.
