
மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மருத்துவராக பணிபுரிந்து வந்த இவர், புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் 2020 ஜூலை மாதம், அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்னை காரணமாக,
தனது எதிர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வாசல் முன்பு சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
அத்துடன், பயன்படுத்திய முகக் கவசங்களை வீசிய வீடியோவும் வெளியானது.
இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், தற்போது சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டின் முன்பு ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு, சுப்பையா தூண்டுதலாக இருந்ததாக கூறி, மருத்துவர் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

