செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

UkRaine War- புதினின் தவறான முடிவால் ரஷ்யாவுக்கு பின்னடைவு!

 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில். இப்போரில் ரஷ்யா மெல்ல மெல்ல தோல்வியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

ஐரோப்பா  கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடு உக்ரைன். சுமார் 4 கோடி மக்கள்  தொகை கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைன் நாட்டு பொதுமக்களை காப்பாற்ற போவதாக கூறி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் 24ஆம் தேதி போரை அறிவித்தார் புதின்.

21ஆம் நூற்றாண்டில் ஒரு போரா? என உலக நாடுகள் அதிர்ச்சியான நிலையில், ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மடிந்துள்ளனர். அழகிய நகரங்கள் உருகுலைந்து சின்னாபின்னமாயுள்ளன.

பார்த்து பார்த்து கட்டிய வானுயர்ந்த கட்டடங்கள் கான்கிரிட் குவியலாக காட்சியளிக்கின்றன.

தடை விதிக்கப்பட்டுள்ள பாஸ்பரஸ் வெடிமருந்துகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்துவதால் கட்டடங்களும் குடியிருப்புகளும் தீ பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.

உக்ரைனை போரின் மூலம் ரஷ்யா வெல்லவே முடியாது என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறுகிறார்.

போர் தொடுத்தது புதினின் மிகப் பெரிய தவறு என நேட்டோ அமைப்பு தலைவர் ஸ்டோலன்பெர்க்  கூறுகிறார்.

போரின் எதிரொலியாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ரஷ்யா மீது விதித்துள்ள தடையை, அம்மக்கள் மெல்ல உணர தொடங்கியுள்ளனர்.

உற்பத்தி செய்த பொருள்களை ஏற்றுமதி செய்யாமலும் தேவையான பொருள்களை இறக்குமதி செய்ய முடியாமலும் திணறி வருகிறது ரஷ்யா.

இது மட்டுமல்லாமல் ரஷ்யாவிலிருந்து ஏறக்குறைய அனைத்து வெளிநாட்டு பெருநிறுவனங்களும் வெளியேறி விட்டன.

இதனால் வேலையின்மை தலைவிரித்தாடும் என கணிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இதுவரை 10 ஆயிரம் ரஷ்ய வீர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கு மறுப்போ சரியான தகவலையோ வெளியிடாமல் ரஷ்யா மவுனம் காக்கிறது.

ரஷ்ய வீரர்களை கடுமையாக எதிர்த்து போராடும் உக்ரைன் மக்கள் அவர்களை பல இடங்களிலிருந்து துரத்தி அடிக்கின்றனர்.

சரியான திட்டமிடல்கள் இல்லாததால் ராணுவ வீரர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலக அளவில், தலைவர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் அதிபர் புதினுக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரஷ்யாவிலும் பெரும்பாலான மக்கள் போரை விருப்பவில்லை.

ரஷ்ய ராணுவத்தினர் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அதன் மிகப்பெரிய நட்பு நாடான பெலாரசின் வீரர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிடுவதில்லை என தீர்மானத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் புதினின் மிகப் பெரிய பலமாக கருதப்பட்ட கிரெம்ளின் அதிகாரி அனடோலி சுபைஸ் அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

698 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன