சமூக வலைதளமான டுவிட்டரில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துள்ளது. இவர்களின் காரசார கருத்து பதிவிற்கு பதில் கருத்து பதிவிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தமிழிசை கூறிய கருத்தை வைத்து, சண்டையை துவக்கினார் குஷ்பு.
குஷ்பு : மக்கள் அரசியலில் சேர்வது அவர்களின் கொள்கைள் மற்றும் விருப்பத்திற்காக மட்டுமே. நீங்கள் தான் உங்கள் கட்சியில் சேரும்படி கெஞ்சிக் கொண்டு இருக்கிறீர்கள்.
தமிழிசை : குஷ்பு அரசியலில் இணைந்தீர்களா? கட்சிகளுக்கு தாவினீர்களா? திமுக.,வில் இருந்து விலகி காங்.,கில் இணைந்தது மிகச் சிறந்த கொள்கையாலா என அனைவருக்கும் தெரியும்.

குஷ்பு : திமுக.,விலிருந்து விலகுவதற்கு 6 மாதத்திற்கு முன்பிருந்து இருகட்சிகளுடனும் எனக்கு நல்லுறவு இருந்தது. உங்கள் மூளையை சரிசெய்து கொண்டு பேசுங்கள்.
தமிழிசை : தங்களை சேர்க்க காங்கிரசிலிருந்து தூதர்கள் வரவில்லை. ஆனால் தங்களை திமுகவிலிருந்து துரத்துபவர்கள் இருந்தார்களே.
குஷ்பு : மறுபடியும் தவறான கருத்தை பதிவிடுகிறீர்கள். எனது முதல் கட்சிக்கும், இரண்டாவது கட்சிக்கும் நான் ஏன் திமுக.,வில் இருந்து விலகினேன் என தெரியும். வதந்திகளையும், மீடியாக்களின் கருத்துக்களையும் உங்களைப் போன்றவர்கர்கள் நம்புவது வருத்தமளிக்கிறது. மற்றவர்களின் மனதை படிக்கும் திறன் உங்களுக்கு இருந்தால் தயவு செய்து என்னுடைய கொள்கையையும் புரிந்து கொள்ளுங்கள். நம்புங்கள். உங்களை நீங்களே அதிகம் காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

தமிழிசை : மிக்க நன்றி. டாக்டர் என்ற முறையில் மற்றவர்களின் மூளையில் என்ன உள்ளது என்பதை ஸ்கேன் பண்ணி தெரிந்து கொள்வதில் நான் ஸ்பெஷலிஸ்ட். கட்சிக்கு நல்லவர்களை கொண்டு வர முயற்சிப்பதற்கு கெஞ்சுவது ஆகாது. வார்த்தைகள் தான் எண்ணங்களை காட்டும்.
குஷ்பு : எனக்கு ஒன்றை தெளிவுபடுத்துங்கள், நீங்கள் மனோதத்துவ நிபுணரா அல்லது பொது மருத்துவரா? டாக்டர்கள் அவர்களின் நோயாளிகளை சந்திப்பதால், அவர்களை தான் படிக்க முடியும். உங்கள் கருத்திற்கு தான் நான் பதில் கருத்து கூறினேன். நான் கூறியதை மீண்டும் நன்றாக படித்து பாருங்கள். இவ்வாறு அவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைதளத்தில் கருத்து மோதலில் ஈடுபட்ட குஷ்பு டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது மீண்டும் பாஜகவை வம்புக்கு இழுத்துள்ளார். அவர் கூறியதாவது:
பாஜக நோட்டா அளவுக்கு கூட வாக்குகள் வாங்கவில்லை என்று குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஸ் மேவானி கூறியிருந்ததை படித்தேன். தமிழகத்தில் பாஜக தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும், புரண்டு என்ன செய்தாலும் தமிழகத்தில் வர முடியாது.
