நாயகன் மணிகண்டனும், நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியாவும் கல்லூரியில் இருந்தே காதலித்து வருகிறார்கள். ஸ்ரீகெளரி வேலைக்கு போகிறார். மணிகண்டன் கடை வைக்கும் முயற்சியில் இறங்கி அதில் சில சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
இதற்கிடையே, எதற்கெடுத்தாலும் காதலி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார்.
ஒரு சூழ்நிலையில் மணிகண்டனை விட்டு பிரிய முடிவு எடுத்து பிரேக்கப் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா. அதை மணிகண்டனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை மீண்டும் மீண்டும் ஸ்ரீ கௌரி பிரியாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறார். ஏற்க மறுத்தால் சாகப்போவதாக மிரட்டுகிறார்.
மணிகண்டனின் தொல்லையை தாங்க முடியாத ஸ்ரீ கெளரி ப்ரியா என்ன முடிவு எடுத்தார்? மணிகண்டன் என்ன ஆனார் என்பது தான் ‘லவ்வர்’ படத்தின் மீதிக்கதை.
மணிகண்டன் கதாபாத்திரம் சதா சிகரெட், சரக்கு, கஞ்சா என சுற்றித்திரிவது ஓவர் டோசாக இருக்கிறது.
ஸ்ரீகெளரி முடிந்தவரை தனது கதாபாத்திரத்தை முழுமையாக கவனம் ஈர்க்க முயற்சித்திருகிறார்.
காதலர்களின் உறவுச் சிக்கலை கருவாக எடுத்துக்கொண்டு அதில் காதலனின் காட்சிகளுக்கு ஓவர் டோஸ் கொடுத்திருக்கிறார். இளைஞர்களுக்கு ஏற்றபடி திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைக்கிறேன் என முயற்சித்து சமூகத்திற்கு தப்பான பாதையை காட்டியிருக்கிறார்.
குடும்ப சிக்கல்… காதலி மீது சந்தேகம், சதா சரக்கு, சிகரெட், கஞ்சா, திருமணத்திற்கு முன்பே காதலியுடன் தாம்பத்திய உறவு இதெல்லாம் வைத்து என்ன சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரபுராம்.
வழக்கமான பாணியிலான காதல் கதையாக அல்லாமல், காதலின் மறுபக்கத்தையும் குறிப்பாக ஆண்கள் பலரும் இப்படிப்பட்டவர்கள் என்றும், டேட்டிங் வைத்துக் கொண்டாலும் பிடிக்கவில்லை என்றால் பெண்கள் உதறிவிடுவார்கள் என்றும் சொல்லி தமிழ் கலாச்சாரத்தை தூக்கி எறிந்திருக்கிறார் இயக்குநர் பிரபுராம்.
ஒட்டுமொத்தமாக லவ்வர் ரசனை இல்லை வேதனை!
கோடங்கி
2.5/5