ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் – சொல்வது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி!

 

திருச்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது,

அதிமுக, திமுக, பாஜக தலைமையில் மூன்று பிரதான கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் தேர்தலில் போட்டி என்று வருகின்ற போது அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் என்பதை இந்த நாடு அறியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பிரதமரை விமர்சிப்பார், அதை பற்றி கவலை இல்லை; இன்னொன்று என்னை பற்றி விமர்சிப்பார். சரக்கு இருந்தால்தானே பேச முடியும், அவர் பொம்மை முதலமைச்சர்.

எம்ஜிஆர், அம்மா வழியில் 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை நாம் கொடுத்தோம். ஆனால் மூன்றாண்டு திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக அரசாங்கம். மூன்றாண்டு காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் மூன்று வருஷமாக ஒரே செங்கலை காட்டிக் கொண்டு வருகிறார். எங்கள் கோரிக்கையை ஏற்றுதான் மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வந்தது. இந்த செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும், ரோட்டில் காட்டி என்ன பயன்? ஸ்கிரிட மாத்துப்பா, கதைய மாத்து, 2019 தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு 38 எம்.பிக்களை மக்கள் தந்தார்கள், இந்த 38 பேரும் நாடாளுமன்றத்தில் செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவனையை பெற்று இருக்கலாம். நாடாளுமன்றத்தில் பெஞ்சை தேய்த்துவிட்டு இங்கே செங்கலை தூக்கி காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், இங்கே செங்கலை காட்டி வித்தை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உனக்கு தெம்பு திராணி இருந்தால் யார் ஆட்சியில் நீட் வந்தது என்று பேசலாமா? 2010 டிசம்பர் 21ஆம் தேதி மத்திய அரசு நீட் அறிவிப்பை வெளியிட்டது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி உடன் திமுக இருந்தது. மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை அதிமுகதான் கொடுத்தது. மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்கத்தான் இவ்வளவு பேசுகிறார்கள் திமுகவினர்.

நான் டெல்டாக்காரன் என்று முதல்வர் வீர வசனம் பேசினார். ஆனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் 3 லட்சம் ஏக்கர் நீர் இல்லாமல் காய்ந்து கருகி போய்விட்டது. ஆனால் பெங்களூருவில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். விவசாயிகளின் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும்.

பச்சைத்துண்டை போட்டுக் கொண்டு பச்சை பொய் பேசுவதாக திமுகவினர் சொல்கிறார்கள், ஆனால் பச்சை பொய் சொல்வது நானா? ஸ்டாலினா?; திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா பகுதி விவசாயிகள் பறிபோய்விடுமோ என்று அஞ்சினார்கள். ஸ்டாலின் அமைச்சராக இருந்த போது ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். ஆனால் டெல்டாவில் இப்படிப்பட்ட எந்த திட்டமும் கொண்டுவரக்கூடாது என்பதற்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

130 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன