அதிரடி சம்பவம் செய்கிறாரா விகரம்? வீர தீர சூரன் கோடங்கி விமர்சனம் 4/5
பெரும்பாலும் மலையாள படங்களில் சாதாரண சின்ன விஷயத்தை வைத்து அத்தனை யதார்த்தமாய் திரைக்கதையை நகர்த்தி படம் பார்க்கிற நம்மை படத்தோடு பயணிக்க வைத்துவிடுவார்கள்…. அப்படி ஒரு அனுபவத்தை சரியான நடிகர்களை வைத்து இயக்குனர் அருண்குமார் வீரதீர சூரன் படமாக கொடுத்திருக்கிறார்.
சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்த படம் பல கட்ட போராட்டங்களை சந்தித்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு மேல் தான் உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். உடன் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, (பிருத்விராஜ் உள்ளிட்டார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது படத்தின் டிரைலர் வெளியான போதே தெரிந்தது. இதுவரை இல்லாத புது முயற்சியாக ஒரு படத்தின் முதல் பாகம் வெளியாகும் முன்னரே இரண்டாம் பாகம் நேரடியாக வெளியாகியுள்ளது குறிப்பிட்த்தக்கது.
வீர தீர சூரன் படம் விறுவிறுப்பாக துவங்கிய உடனே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன்பு நாமே கதையோடு இணைந்து விடுகிறோம்.
அப்படி என்னதான் கதை…
பெரியவர் என்கிற ரவியின்(பிருத்விராஜ்) வீட்டிற்கு ஒரு பெண் வருகிறார். கிரிமினல்களுடன் தொடர்பு உடைய பெரிய கை தான் அந்த பெரியவர் ரவி. இந்நிலையில் தன் மனைவி மற்றும் மகளை காணவில்லை என அந்த பெண்ணின் கணவர் எஸ்.பி. அருணகிரியிடம்(எஸ்.ஜே.சூர்யா) புகார் அளிக்கிறார்.
பெரியவர் மற்றும் அவரின் மகன் கண்ணன்(சூரஜ் வெஞ்சாரமூடு) ஆகியோரை தாக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்த அருணகிரிக்கு தானாக ஒரு வாய்ப்பு வந்துவிட்டது. பெரியவரை என்கவுன்ட்டரில் கொல்ல முடிவு செய்கிறார் அருணகிரி.
இதை தெரிந்து கொண்ட பெரியவரோ தன் விசுவாசியான பழைய அடியாள் காளியை அணுகுகிறார். காளியான விக்ரமோ பழைய கேங்ஸ்டர் வேலையை விட்டுவிட்டு தன் மனைவி கலை(துஷாரா விஜயன்), 2 பிள்ளைகளுடன் நிம்மதியாக வசித்து வரும் நேரத்தில் இப்படியொரு சிக்கல் அவரைத்தேடி வருகிறது.
மூன்று பேர் காளியை தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்த அவரின் குடும்பத்தை வைத்து மிரட்டுகிறார்கள். காளி என்ன செய்யப் போகிறார், என்கவுண்டர் நடந்ததா? விக்ரம் பழைய முதலாளியை காப்பாற்றினாரா? என பதட்டம் நம்மை தொத்திக் கொள்கிறது. கதை நகர நகர ஆர்வமும் அதிகரிக்கிறது. கண்ணிவெடி காட்சி வரும் போது இருக்கையின் நுனிக்கே வர வைத்துவிடுகிறார் இயக்குநர் அருண்குமார். காளியும், அருணகிரியும் சந்திக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.
வழக்கமாக விக்ரம் தன் படங்களில் நடிப்புக்கு பஞ்சம் வைக்க மாட்டார். அதிலும் இப்படி நடிப்புக்குதீனி போடும் படங்களில் மனுஷன் விளையாடி வைப்பார். இதிலும் விக்ரம் அப்படி தீயாய் தெறிக்க விடுகிறார்.
துஷாரா விஜயன் வழக்கம் போல மிக நேர்த்தியாக விக்ரம் ஜோடியாக வாழ்ந்திருக்கிறார். பெரியவர் ரவியாக வரும் பிருத்விராஜ், அவர் மகனாக வரும் சூரஜ் வெஞ்சாரமூடு இருவரும் அசத்தி இருக்கிறார்கள். தமிழ் சினிமா இன்னும் இவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
போலீஸ் அதிகாரியாக வரும் எஸ்.ஜே.சூர்யா கடுமையான வில்லத்தனத்தில் தனி முத்திரை பதிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அந்த 15 நிமிட சிங்கிள் ஷாட் ரசிகர்களை அதிகமாக கவரும்.
இயக்குனர் அருண்குமாரின் கதையும் திரைக்கதையின் நகர்த்துதலும் அத்தனை அருமை. பிளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சம் கத்திரியும் கவனமும் செலுத்தி இருக்கலாம். மற்றபடி தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் அருண்.
பெயருக்கேற்றார் போல வீர தீர சூரன்… அகசாய ஆக்ஷன் அசுரன்.
கோடங்கி 4/5