எம்புரான் எல்2 விமர்சனம் 3/5
ஐயுஎஃப் எனும் கட்சியை வழி நடத்தி வந்த முதலமைச்சர் ராம்தாஸ் திடீர் மறைவுக்குப் பிறகு கேரள அரசியல் களத்தில் நிகழும் குழப்பங்களைத் தீர்க்க, வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் ஜதினை(டொவினோ தாமஸ்) அழைத்து வருகிறார் நெடும்பள்ளி எம்.எல்.ஏவான ஸ்டீபன். ராமதாஸின் மறைவை பயன்படுத்தி ஆட்சியிலும், குடும்பத்திலும் அவரது கட்சியிலும் குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார் ஸ்டீபன். அவருக்கு ‘குரேஷி அஃப்ராம்’ எனும் இன்னொரு பெயர் இருப்பதும், உலக நாடுகள் பல அஞ்சி நடுங்குகிற கேங்ஸ்டராக அவர் திகழ்வதும் தெரிய வருவதோடு முதல் பாகமான ‘லூசிஃபர்’ முடிவடைந்திருந்தது.
ஆனால். இந்த முன்கதைச் சுருக்கம் ஏதும் சொல்லத்தேவை இல்லாமலேயே ‘எம்புரான்’ கதை தொடங்குகிறது.
திரைக்கதை தொடக்கமே.. மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் சிலர் அருகிலுள்ள அரண்மனையில் வசித்துவரும் ராஜ வம்சத்தைச் சேர்ந்த இந்து பெண் ஒருவரிடம் அடைக்கலம் கேட்டுச் செல்வதில் தொடங்குகிறது.
அங்கே இஸ்லாமிய மக்கள் அடைக்கலம் புகுந்த விவரம் தெரிந்துகொண்டு தாக்குதல் நடத்த வருகிறது பல்ராஜ் படேல் (அபிமன்யூ சிங்) தலைமையிலான ஒரு மதவெறி கும்பல். சயீத் மசூத் எனும் இளைஞனின் குடும்பம் உட்பட அவர்களது வன்முறையால் அடைக்கலம் கேட்டு வந்தவர்கள் அனைவருமே உயிரிழக்கின்றனர். அந்த வன்முறைச் சம்பவத்தில் உயிர் தப்பும் சயீத் மசூத்தை ஒரு தீவிரவாத இயக்கம் பயன்படுத்திக்கொள்ள முனையும்போது, குரேஷி அஃப்ராம் அவரை காப்பாற்றுகிறார்.
இதெல்லாம் 2003இல் நிகழ்கிறது. அதன்பின் திரைக்கதை சமகாலத்திற்குத் தாவுகிறது.
இதை பார்க்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு பில்கிஸ்பானு குடும்பத்தாரை ஒரு மதவெறி கும்பல் பழிதீர்த்து கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்த சிசிவை கூட வெளியில் எடுத்து கொன்ற கொடூரம் கண் முன்னால் வந்து போகிறது
அதன் பிறகு திரைக்கதை கேரள அரசியலுக்குள் பயணிக்கிறது….
கேரள முதலமைச்சராக இருந்து வரும் ஜதின் ராம்தாஸ் தான் சார்ந்த ஐயுஎஃப் கட்சியில் இருந்து விலகிப் புதிதாக ஐயுஎஃப் (பிகேஆர்) எனும் கட்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவிக்கிறார். அது ஐயுஎஃப் மட்டுமல்லாமல் எதிர்கட்சியான ஆர்பிஐ (எம்)மை சார்ந்தவர்களையும் திடுக்கிட வைக்கிறது. மேலும், இந்துத்துவ அடையாளமாகத் திகழும் பஜ்ரங்கி உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் அறிவிக்கிறார் ஜதின். ஆனால் ஸ்டீபன் எங்கே இதற்கு தடையாக இருப்பாரோ என பயப்படுகிறார்.
தம்பியின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த அக்கா பிரியதர்ஷ்னி தம்பிக்கு எதிராக அரசியலில் களம் இறங்குகிறார்.
இன்னொரு பக்கம் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனை பிடிக்க முயற்சிகள் நடக்கிறது…. அதற்கு முன்னதாக பலகோடி மதிப்புடைய போதை பொருளை பாலைவனத்தில் கட்த்தி வரும் போது குரோஷி அஃப்ராம் ஆட்கள் அதை அழித்து விடுகிறார்கள்.
இந்த சூழலில் கேரளாவுக்குள் கால் வைக்க முயற்சிக்கும் பஜ்ரங்கி தான் ஒருகாலத்தில் பல்ராஜ் படேல் என்ற பெயரில் இருந்தவர். அவரது வரலாற்றை அறியும் பத்திரிகையாளர் கோவர்தன் (இந்திரஜித்), இந்த ‘மூவ்’ பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்று அறிய முயற்சிக்கிறார். அதனைத் தெரிந்துகொள்ள முடியாத பட்சத்தில், வரவிருக்கும் பிரச்சனையில் இருந்து கேரளத்தைக் காப்பாற்ற ஸ்டீபனால் மட்டுமே முடியும் என்று நம்பி அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்.
திடீரென்று ஒரு நாள் ஸ்டீபனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கோவர்தனுக்குக் கிட்டுகிறது. அப்போது, அவரிடம் பேசும் ஸ்டீபன் ‘விரைவில் கேரளத்தில் நிகழும் குழப்பங்கள் முடிவுக்கு வரும்’ என்று உறுதியளிக்கிறார்.
இந்த சூழலில் ஈராக்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஸ்டீபன் எனும் குரேஷி அஃப்ராம் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அது ஜதினை ஆறுதல்படுத்துகிறது. அதேநேரத்தில், அவரது சகோதரி பிரியதர்ஷினியை கவலைக்கு உள்ளாக்குகிறது.
இந்த நிலையில், திடீரென்று கேரள அரசியல் களத்தில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனை ஐயுஎஃப் கட்சித்தலைவர்கள் எப்படி எதிர்கொண்டனர்? அதில் பிரியதர்ஷினியின் பங்கு என்னவாக இருந்தது? பிரியதர்ஷினியை ஒரு கும்பல் கொல்ல வருகிறது. ஜதின் – பஜ்ரங்கி கூட்டணி என்னவானது? ஸ்டீபன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா? இந்த கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளிக்கிறது ‘எல்2: எம்புரான்’னின் இரண்டாம் பாதி.
கதை கேரள அரசியலில் பயணித்தாலும் சர்வதேச போதை பொருள் நடமாட்டம், காவி மத வெறி கும்பலில் கோர தாண்டவம் என பல முனைகளில் பயணித்து ஒரு ஆங்கில படம் பார்க்கிற உணர்வை தருகிறது.
லாஜிக் என்பது மருந்துக்கு கூட இல்லை என்றாலும், திரைக்கதையில் எங்கும் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் பிருத்விராஜ்.
பல சண்டைக்காட்சிகள் மோகன்லால் ரசிகர்களுக்காகவே வலிந்து திணிக்கப்பட்ட்தை தவிர்த்திருக்கலாம்.
கேமரா நாடு நாடாக பயணித்து அசத்துகிறது. பின்ன்ணி இசையும் பல நேரங்களில் அட்டே போட வைக்கிறது.
மற்றபடி எம்புரான் வலுவானவந்தான். ஆனாலும் மோகன்லால் யார் என்பதை கடைசிவரை சொல்லாமல்… பார்ட் 3 இருப்பதை உறுதி செய்கிறார்கள்.
அது சீனாவில் நடப்பது போன்று தொடக்கத்தை வைத்து அதில்தான் மோகன்லால் யார்? அவர் எப்படி சர்வதேச கேங் ஸ்டாராக மாறினார், குரோஷி அஃப்ராம் எப்படி ஆனார் என்பதை எல்லாம் சொவார்கள் போல…
மொத்தத்தில் எம்புரான் காவிகளையும், சர்வதேச போதை ஆசாமிகளையும் நெம்பி எடுக்குறான்.
கோடங்கி 3/5