டூரிஸ்ட் பேமிலி விமர்சனம் 4/5
வழக்கமான சசிக்குமார் நடிக்காமல் வாழ்ந்திருக்கும் படம் டூரிஸ்ட் பேமிலி. பெயரைப்போலவே படமும் குடும்பமாய் பார்க்கிற மாதிரியே இருக்கிறது.
கதை இதுதான்…
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட சசிகுமார் குடும்பம், படகில் ஏறி கடல் வழியாக தமிழக எல்லையான ராமேஸ்வரம் வந்தடைகிறது.
சசிகுமாரின் மனைவி சிம்ரன். இவர்களது மகன்களாக மிதுன் ஜெய் சங்கர் மற்றும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் இருவரும் என நால்வரும் ராமேஸ்வரம் வகின்றனர். சிம்ரனின் சகோதரனாக வரும் யோகிபாபு, இவர்களை அழைத்துச் செல்ல அங்கு காத்திருக்கிறார்.
இவர்கள் அனைவரும் அங்கிருக்கும் போலீஸால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அதில் போலீஸாக இருக்கும் ரமேஷ் திலக், இவர்களது கதையை கேட்டு, அங்கிருந்து பாதியில் இறக்கி விடுகிறார்.
தொடர்ந்து அங்கிருந்து சென்னை வரும் சசிகுமாரின் குடும்பம். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர். அங்கிருக்கும் நபர்களிடம் தங்களது அன்பை வெளிப்படுத்தி நல்லதொரு நட்பில் இருந்து வருகிறது சசிகுமாரின் குடும்பம்.
சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்தில் வந்திறங்கிய சமயத்தில், அங்கு ஒரு பாம் வெடிக்கிறது. இந்த பாம் வெடித்ததற்கு காரணம்சசிகுமாரின் குடும்பம் தான் என்று போலீஸ் நினைக்க அவர்களைத் தேடி சென்னை வருகிறது ராமேஸ்வரம் போலீஸ்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
தர்மதாஸ் என்ற கதாபாத்திரத்தில் இரு பிள்ளைகளுக்கு தந்தையாக நடித்திருக்கும் சசிகுமார் நடிப்பின் உச்சம் தொட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அயோத்தி மாதிரியான ஒரு மாபெரும் ஹிட் படத்தினைத் தொடர்ந்து மற்றுமொரு மைல்கல்லாய் இப்படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்.
செண்டிமெண்ட், மனிதம், எமோஷன்ஸ், என பல பரிணாமங்களில் சசிகுமாரின் நடிப்பு நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது. இவருக்கு மனைவியாக வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நம்மை 90-களுக்கு இழுத்துச் சென்று விட்டார் நடிகை சிம்ரன். இப்படியொரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்காகவே சசிகுமாரையும் சிம்ரனையும் வெகுவாகவே பாராட்டலாம்.
ஆள்தோட்ட பூபதி பாடலுக்கு சிம்ரன் ஆடிய ஆட்டம் திரையரங்கையே ஆட்டம் போட வைத்தது.
மகன்களாக நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் இருவரும் படத்திற்கு மிகப்பெரும் தூண் தான். அதிலும், மாஸ்டர் கமலேஷ் ஜெகனை வைத்து இயக்குனர் நகர்த்திய காமெடி சரவெடிகள் ஒவ்வொன்றும் தெறிக்கின்றன.
படத்தின் துவக்கத்தில் ஆரம்பித்து இறுதி வரை கமலேஷ் அடிக்கும் லூட்டிகள் திரையரங்கை சிரிப்பலையில் அதிர வைக்கிறது. யோகிபாபுவை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்ஷ்மி என படத்தில் நடித்த அனைவருமே மிக கச்சிதமாக அவர்தம் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து முடித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மிகவும் அரிதான படைப்பாக வரும் இம்மாதிரியான படங்களை தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே கொண்டாடலாம். மனிதர்களுக்குள் மனிதம் காட்டினால் மட்டுமே அது மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை மிக அழகான ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை ஒரு காவியமாக படைத்திருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.
எந்தவொரு இயக்குனரிடமும் பணிபுரியாமல், இப்படியொரு படத்தை கொடுத்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம். சீரியஸாக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் சட்டென காமெடி காட்சிகளை வைத்து படம் பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார் இயக்குனர்.
காமெடி வேணுமா காமெடி இருக்கு,
எமோஷன்ஸ் வேணுமா எமோஷன்ஸ் இருக்கு,
கண்ணீர் வேணுமா அதுவும் இருக்கு
என படம் பார்க்க வருபவர்களுக்கான அனைத்தையும் இப்படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர். எந்தவொரு ஆபாச காட்சிகளுமின்றி, சண்டைக் காட்சிகளுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கும்படியான ஒரு படம்தான் இந்த “டூரிஸ்ட் ஃபேமிலி”.