
கண்ணப்பா விமர்சனம் 3/5
மிக பிரமாண்ட சினிமாவாக வந்திருக்கும் ஒரு புராண கதைதான் கண்ணப்பா.
சிவன் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்து ஷாக் ஆன ஒரு பக்தன் தன் கண்களை பிடுங்கி சிவனுக்கு பொறுத்தியதாக ஒரு புராண கதை உண்டு.
இதுதான் இந்த கண்ணப்பா கதையின் மைய கரு.
படம் தொடங்கி முதல்பாதி முடிகிறவரை மையகருவை தேட வேண்டிய நிலை… கதையை தாண்டி திரைக்கதை எங்கோ பயணிக்கிறது.
ஆத்தீகர்களுக்கான படமோ என எண்ணும் அளவுக்கு கடவுளை கல் என்றும், பலி கேட்பதெல்லாம் கடவுளா? என வசனங்கள் வருவதெல்லாம் ஷாக் தான்…
அதோடு ஹீரோயினோடு ஹீரோ விஷ்ணு மஞ்சுவின் காதல் ரொமான்ஸ் எல்லாம் கண்ணப்பா கடவுள் படமா… கண்ண மூடுப்பா இது காதல் படம்பா என சொல்லும் அளவுக்கு ரொமான்ஸ் தூக்கல் ரகம்.
கண்டிப்பாக குழந்தைகளுக்கு இந்த ரொமான்ஸ் காட்சிகளில் கண்ணை மூட வைப்பார்கள் பெற்றவர்கள் என்பது மட்டும் நிஜம்…
மோகன்லால், பிரபாஸ், மோகன்பாபு காட்சிகள் குறைவு என்றாலும் மனசில் நிற்கிறது.
சரத்குமார், மதுபாலா, சிவராஜ்குமார் உள்ளிட்ட காட்டுவாசி காட்சிகளில் ஒளிப்பதிவு அத்தனை அருமை… மிரட்டல் ரகம்… அதே ஒளிப்பதிவு அழகிய நீரூற்று ஆறு மலைகள் காடுகள் என பயணிக்கும் போது வியக்க வைக்கிறது.
லொகேஷன்கள் எல்லாம் திரைக்கதையை தாண்டி சபாஷ் போட வைக்கிறது.
ஒரு புராண கதைக்கு சர்வதேச தரத்தை கொடுத்து இந்தியாவிலும் பிரமாண்டமாக படம் எடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதமாக இசையும் பின்னணி இசையும் ரொம்பவே பலம் சேர்க்கிறது.
ஒரே ஒரு மைனஸ் படத்தின் நீளம்… 3 மணி நேரம்தான். ஆனாலும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் லொகேஷன்களால் கண்ணப்பாவை காணலாம்.
கோடங்கி 3/5
