விளக்கமளிக்க மறுப்பு பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர்.
111 எம்.எல்.ஏக்களுடன் பெரும்பான்மை இல்லாமல் தமிழக அரசு உள்ளது என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் பெரும்பான்மை குறித்த உண்மை விளங்கும். முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடந்து வருகிறது; மேலும் மூன்றரை ஆண்டு காலம் ஆட்சி நீடிக்கும் . என அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.
இந்தநிலையில், பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பெரும்பான்மை அரசு என அமைச்சர் தங்கமணி கூறிய கருத்துக்கு விளக்கமளிக்க மறுப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு செய்ததாக பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின் தினகரன் பேட்டி அளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தி.மு.க-வுடன் கூட்டணி என்று என் மீது குற்றம்சாட்டினர். என் மீதான குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க அனுமதி கேட்டபோது, அனுமதி மறுத்தனர். அமைச்சர் தங்கமணி, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து பேசியதற்கும் பதில் சொல்ல அனுமதி கேட்டேன். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தேன்’ எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் நட்பு ரீதியில் பேசினால் தவறா? என்று தெரிவித்தார்.