’பல்டி’ திரைப்பட விமர்சனம் 3/5
கபடி விளையாட்டு வீரர்களான ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களது நண்பர்கள் கபடி விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பண ஆசைக்காட்டி தன் பக்கம் இழுக்கும் கந்து வட்டி மாஃபியா செல்வராகவன், கபடி களத்தை மறக்கடித்து, தனது கந்து வட்டி களத்தில் பயணிக்க வைக்கிறார். இதனால், நண்பர்களின் வாழ்க்கை திசை மாறி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள, அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதை ஆக்ஷன் பாணியில் சொல்வதே ‘பல்டி’ கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல்மொழியையும் அசால்டாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் ஷேன் நிகம், கபடி போட்டியிலும் சரி, சண்டைக்காட்சிகளிலும் சரி அசத்துகிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சாந்தனுவுக்கு இந்த படம் நிச்சயம் நல்ல பேரை பெற்றுத்தரும். அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்து அசத்தியிருக்கிறார். நல்லவரா அல்லது கெட்டவரா என்று புரிந்துக்கொள்ள முடியாத ஒரு நடிப்பை வெளிப்படுத்தி தனி முத்திரை பதித்து கொள்கிறார் சாந்தனு.
இயக்குநர் செல்வராகவன், அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் படத்திற்கு கூடுதல் சிறப்பு.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இன்னும் கூட கொஞ்ச நேரம் வந்திருக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி அழகு.
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருக்கும் பீஜியம்கள் கவனம் ஈர்க்கின்றன.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் எத்தனை கேமராக்கள் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை, ஆனால் காட்சிகளை மிரட்டலாக படமாக்கியதோடு, குறிப்பாக கபடி போட்டிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் மிரள வைக்கிறது. கூடவே சபாஷ் போட வைக்கிறது. குறிப்பாக அந்த சோடாபாக்டரி சண்டை அசத்தல் ரகம்.
பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார் எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம்,
கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில அப்பாவி இளைஞர்களின் சீரழியும் வாழ்க்கை, என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்திருக்கும் திரைக்கதை, மற்றும் காட்சிகள் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது. சண்டைக்காட்சிகளின் நீளம் சற்று தொய்வடைய செய்தாலும், சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் புதிய யுத்திகள் அந்த குறையை மறந்து ரசிக்க வைக்கிறது.
கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், காட்சிகள் மற்றும் திரைக்கதையை வேகமாக நகர்த்தி சென்றது என முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை கொடுத்த்தோடு, கபடி அணிகளுக்கு பஞ்சமி, பொற்றாமரை என்று பெயர் வைத்ததோடு, உதயசூரியன் என்ற மலையாளப் பாடல் மூலமாக மறைமுகமாக ஒரு அரசியலும் பேசி அசத்துகிறார் இயக்குநர் உன்னி சிவலிங்கம்
மொத்தத்தில், ‘பல்டி’ ரசிக்கும் ரகம்!