கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வீடு வீடாக நாளை முதல் வினியோகம்!
தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மட்டுமே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருட்கள் வழங்கும் பணி கடந்த 2-ந்தேதி ரேசன் கடைகளில் தொடங்கப்பட்டது. இதனை பெற ரேசன் கடைகளில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
இதன் காரணமாக நிவாரணத்தொகை ரூ.1000-த்தை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை ரேசன் கடைகளில் வினியோகம் செய்யும் நடைமுறை இன்றுடன் நிறுத்தப்படுகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரேசன் கடைகள் இயங்காது. அதனால் நாளை வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன்களை அளிப்பதுடன் நிவாரண உதவித் தொகை ஆயிரத்தை நேரில் வழங்க இருக்கிறார்கள்.
நாளையே நிவாரண உதவித் தொகை முழுவதும் வழங்கி முடிக்கப்பட திட்டமிட்டு இருக்கிறார்கள்.