கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது.
மறுநாள் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே முந்தைய நாள் மதியம் 1 மணிக்கு பிறகு அலிபிரி சாலை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று, மறுநாள் தரிசன டோக்கன் பெற்று நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு, முந்தைய நாள் காலை 9 மணிக்கு பிறகு மலைப்பாதையில் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மலைக்கு செல்ல முடியாமல் அலிபிரி சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
சோதனைச்சாவடியில் வாகனங்கள் வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாட்டுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளால் பக்தர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பே இந்த விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தால் அதற்கு தகுந்தவாறு தங்கள் நேரத்தை மாற்றி அமைத்து கொள்ள வசதியாக இருந்திருக்கும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தேவஸ்தானம் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

