தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற
முழக்கத்தோடு காணொலி காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர், சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, குமரி ஆகிய மாவட்டங்களில்
பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி மற்றும் உடுமலை, தாராபுரம், திருமுருகன்பூண்டி, வெள்ளகோவில், பல்லடம் மற்றும்
காங்கயம் ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் 15 பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க-கூட்டணி கட்சிகளான,
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 440 வேட்பாளர்களை ஆதரித்து
இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்கிறார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் 102 இடங்களில்
பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூலனூர், கன்னிவாடி, கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், குண்டடம், உடுமலை, முத்தூர், காங்கேயம்,
சென்னிமலை பழைய கோட்டை, வெள்ளகோவில்,
உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்களில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு
மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேப்போல் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அவினாசி, மடத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம், ராக்கியாபாளையம், சாமளாபுரம்
கருகம்பாளையம், ஆண்டிபாளையம், பெரியாண்டிபாளையம், வீரபாண்டி, வஞ்சிபாளையம் உள்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 200 இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள்
தெரிவித்தனர்.