செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

இறைவன் ஆபத்தானவனா? கோடங்கி விமர்சனம் 2.5/5

 

இறைவன் ஆபத்தானவனா? கோடங்கி விமர்சனம் 2.5/5

 

நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் பல கொடூரக் கொலைகள், அவற்றைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் காவல் அதிகாரிகள்,அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்கிற வழக்கமான கதைக்குள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கும் படம் இறைவன்.

இறைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே சைக்காலஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. படம் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் இருப்பது போன்று ட்ரெய்லர் அமைந்திருந்தது. போதாக்குறைக்கு படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட நிலையில், குழந்தைகளுடன் படம் பார்க்க வேண்டாம் என ஜெயம் ரவியே வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி என்ன கதை எனப் பார்த்தால், நம்மை அச்சப்படுத்தும் காட்சிகள் தான் இறைவன் படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன.

“மனிதன் மிகவும் ஆபத்தான விலங்கு” என்ற கேப்ஷனுடன் தொடங்கும் படத்தின் முதல் காட்சியே மொத்த கதையையும் சொல்லி விடுகிறது.  தப்பு பண்றவங்களை கடவுள் தண்டிக்கும் வரை காத்திருக்காமல் தன்னை கடவுளாக எண்ணிக்கொண்டு என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரி ஜெயம் ரவிக்கும், தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டு கொலைகள் செய்யும் ராகுல் போஸூக்கும் இடையே நடக்கும் யுத்தமே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.

கடும்போக்குக் கொண்ட போலீஸ் அதிகாரியாக ஜெயம்ரவி. அதற்கான மிடுக்குடன் வலம்வருகிறார். அதே மிடுக்குடன் நயன்தாராவையும் அணுகுகிறார்.குற்றவுணர்ச்சியில் நண்பரை எண்ணிக் கலங்கும்போது வேறு முகம் காட்டுகிறார்.ஒன்றுக்கு இரண்டு கனமான வில்லன்களைத் தாண்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

ஜெயம்ரவியைத் தேடித்தேடிக் காதலிக்கும் வேடம் நயன்தாராவுக்கு. அதை அவர் நன்றாகச் செய்திருக்கிறார். அவரை இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எண்ண வைத்திருக்கிறார்.

ஜெயம்ரவியின் நண்பர், இன்னொரு காவல் அதிகாரி என வரும் நரேன், நட்புக்கு இலக்கணமாகிறார்.அதற்கேற்ப நடித்துமிருக்கிறார்.

ஆசிஷ்வித்யார்த்தி, பக்ஸ், சார்லி ஆகியோரில் சார்லி முதன்மை பெறுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ராகுல்போஸ், உளவியல் சிக்கல் ஏற்படும் மனிதர்களின் பிரதிநிதியாகி அச்சப்பட வைக்கிறார்.

அவ்வளவு கொடூரமான ராகுல்போஸைத் தாண்டி தன்னைக் கவனிக்க வைத்திருக்கிறார் வினோத்கிஷன்.அவருடைய பார்வையிலேயே அவருடைய குணத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

உளவியல் கொலைகாரர்கள் பற்றிய படங்கள் ஆங்கிலத்தில் அதிகம். அதுபோன்றதொரு கதையைத் தேர்வு செய்து அதை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகவே கொடுக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் அகமத்.நடிகர்கள் தேர்வு, திரைக்கதையில் நேர்த்தி ஆகியனவற்றைச் சரியாகச் செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் பாவம் கதாபாத்திரங்களின் தேர்வு அவருக்கு கை கொடுக்க திரைக்கதை அவரை சரித்து விட்டிருக்கிறது. அதில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

 

மொத்தத்தில் இறைவன் தன்னைக் காக்கவே போராடுகிறான்!

 

கோடங்கி 2.5/5

98 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன