சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த நடிகர் ராதாரவி திமுக வில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
நயன்தாராவை விமர்ச்சித்த ராதாரவி
சமீபத்தில் நடந்த ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதெல்லாம் சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாரவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்றும் அருவருக்கத்தக்க வகையில் மேடையிலேயே பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி. அவரது அடிப்படை நாகரீகமற்ற பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களைதெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர்
ராதாரவிக்கு இது ஒன்றும் புதுசு இல்லை.யார் என்ன சொன்னாலும் ரவி திருந்த மாட்டார்.பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் மட்டரகமானவர் வார்த்தைகளில் கண்ணியத்தை எதிர் பார்க்க முடியாது.நல்ல நடிகனாக இருந்தால் மட்டும் போதாது நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும் @VigneshShivN @NayantharaU pic.twitter.com/ypfc7saVqT
— kodanki (@onlykodanki) March 25, 2019
இந்த நிலையில் நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திமுகவில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.” என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் ராதாரவியின் இந்த தரக்குறைவான செயல் குறித்து நயன்தாரா எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்த திரையுலகினர்களும் ரசிகர்களும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்ததால் திமுக, இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம் நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதோடு ராதாரவியை மூளை இல்லாதவன் என்று விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதாரவி தொடர்ந்து பெண்களை கொச்சையாக பேசுவதும் ஆபாசமாக வர்ணித்து கைத்தட்டல் வாங்குவதும் அவருக்கு வழக்கமான ஒன்று தான்.