
ஊரடங்கு நீடிப்பா… மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்!
கொரானா என்ற கொடூர வைரசால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்து உள்ளது. தினமும் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 25 லட்சத்தை நெருங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளும் கொரானா வைரசில் இருந்து காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வைரஸ் பரவல் குறித்தும் அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, கொரானா தடுப்பு நடவடிக்கைகள், வைரஸ் பரவல், ஊரடங்கு சூழல் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி கடந்த 2 மற்றும் 11ம் தேதிகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டபோது பல மாநிலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை அறிவித்தார்கள். அதன் பின் மே 3ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து அறிவித்தது பிரதமர் மோடி.

அதே போல இந்த முறையும் ஊரடங்கு முடிவுக்கு வரும் சில தினங்களுக்கு முன்பு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்த உள்ள ஆலோசனையில் கொரானா வைரஸ் பரவல் அதிகரித்தபடியே இருப்பது முக்கிய இடம் பிடிக்கும் என தெரிகிறது. அதோடு நம்மை விட குறைந்த நபர்களே வைரஸ் பாதிப்பில் சிக்கியிருந்தாலும் சிங்கப்பூர் ஊரடங்கை ஜூன் 1ம் தேதி வரை நீடித்து உள்ள விவகாரம் , ஊரடங்கை இப்போது நீக்கினால் சமுக பரவலுக்கு வழி வகுக்கும் என்ற உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை உட்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
அதே நேரம் தொடர்ந்து 3வது முறையாக ஊரடங்கை நீடித்தால் மாநில மக்களிடையே ஏற்படக்கூடிய வாழ்வாதார சிக்கல் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
