பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றிய நிலையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய முடியாத நிலையிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அவர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் கைகளை மட்டும் காட்டி வாக்கு சேகரித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்கள் மீண்டும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இன்று மாலை 5 மணிக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்யும் அவர் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகில் வாக்காளர்களை சந்திக்கிறார்.
6 மணிக்கு தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழவாசல் பகுதியிலும், 8 மணிக்கு- பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியிலும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு திட்டக்குடியிலும், 5 மணிக்கு விருத்தாசலத்திலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தனது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதாவை ஆதரித்து ஓட்டு சேகரிக்கிறார்.
வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு கடலூர், 5 மணிக்கு பண்ருட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த் அன்று இரவு 8 மணிக்கு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை சந்திக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.