ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா… உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து!
ஸ்பா, மசாஜ் நடைபெறும் அறைகளில் CCTV கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ், குயின் ஆயுர்வேதிக் ஸ்பா செண்டர் எனும் பெயரில் ஸ்பா மையம் நடத்த அனுமதிக்கக் கோரி NOC சான்றிதழ் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
ஸ்பா மையம் தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் ஏதுமில்லை.
ஸ்பா தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டை தவிர்க்கவும் மனுவில் கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு இது போன்ற வேறு ஒரு வழக்கில் , உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அந்த உத்தரவு நகலை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த உத்தரவில், ஸ்பா, மசாஜ் சென்டர்கள், தெரபி நடைபெறும் தனி அறைகளில் CCTV , கேமரா பொருத்த வேண்டும்.
அறை கதவு மூடப்பட்டு இருக்க கூடாது. வெளிப்படைதன்மையை கடைபிடிக்க வேண்டும்.சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
எனினும், அந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இருந்து வேறுபடுவதாக தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அரசு நிர்வாகம் மற்றும் சட்டம் இயற்றல் உள்ளிட்ட துறைகளில் தனி நபர் பாதிக்கப்பட்டால், நீதித்துறையை நாடி வருவார்.

ஆனால் நீதித்துறையிலேயே தனிநபர் உரிமையை பாதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பித்தால் அவர் எங்கே செல்வார் ? என்று கருத்து தெரிவித்தார்.
ஜனநாயகத்தில் தனி நபர் உரிமை முக்கியம். ஸ்பா, மசாஜ் நடைபெறும் அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, தனிநபர் உரிமைக்கு எதிரானது. மசாஜ், ஸ்பா மையங்களில் அலுவலக அறைகளில் , மையத்திற்கு உள்ளே வருவோரை கண்காணிக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம்.

